வீட்டுக்கு வரும்படி நள்ளிரவில் அழைத்த பெண்... நம்பி சென்ற தொழிலதிபருக்கு நேர்ந்த கொடூரம்
![வீட்டுக்கு வரும்படி நள்ளிரவில் அழைத்த பெண்... நம்பி சென்ற தொழிலதிபருக்கு நேர்ந்த கொடூரம் வீட்டுக்கு வரும்படி நள்ளிரவில் அழைத்த பெண்... நம்பி சென்ற தொழிலதிபருக்கு நேர்ந்த கொடூரம்](https://media.dailythanthi.com/h-upload/2024/02/12/1605653-tpwpi.webp)
அந்த பெண் அழைத்ததன் பேரில், யூசுப்குடா பகுதிக்கு சென்றதும், அவரை 8 பேர் கொண்ட கும்பல் கடுமையாக தாக்கியது.
ஐதராபாத்,
தெலுங்கானாவின் நாகர்கர்னூல் நகரில் உள்ள சிங்கப்பட்டினம் பகுதியை சேர்ந்தவர் பி. ராமு (வயது 36). ஐதராபாத் நகரின் குகத்பள்ளி பகுதியில் வசித்து வந்துள்ளார். தொழிலதிபரான இவர் சமீபத்திய சட்டசபை தேர்தலுக்கு பின்னர் பா.ஜ.க.வில் இணைந்திருக்கிறார். குகத்பள்ளியில் வசிப்பதற்கு முன்பு யூசுப்குடா பகுதியில் ராமு வசித்து வந்திருக்கிறார்.
இந்நிலையில், யூசுப்குடா பகுதிக்கு கடந்த சில நாட்களுக்கு முன் இரவில் தனியாக சென்ற அவர் பின்னர் பலத்த காயங்களுடன் மரணம் அடைந்து கிடந்துள்ளார். அவருடைய அந்தரங்க உறுப்புகளில் காயங்கள் காணப்பட்டன. இதுபற்றி போலீசார் விசாரணை நடத்தியதில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளிவந்தன.
சி.சி.டி.வி. காட்சியை ஆய்வு செய்ததில், பெண் ஒருவருடன் அவர் உரையாடுவது தெரிந்தது. அந்த பெண் அழைத்ததன் பேரில், அவர் யூசுப்குடா பகுதிக்கு சென்றதும் தெரிய வந்தது.
இதனை தொடர்ந்து அந்த பெண்ணை பிடித்து, போலீசார் விசாரித்தனர். அவர், ராமுவை வீட்டுக்கு வரும்படி அழைத்துள்ளார். இதன்படி இரவில் ராமு அவருடைய வீட்டுக்கு சென்றபோது, 8 பேர் கொண்ட கும்பல் அவரை வீட்டின் முன்பகுதியில் வைத்து, தாக்கி, கத்தியால் குத்தியது. இதில் அவர் பலத்த காயமடைந்து உள்ளார். கொடூர முறையில் தாக்கப்பட்ட அவர் பின்னர் உயிரிழந்து விட்டார்.
இந்த சம்பவத்தில் மணிகண்டன் என்பவரை போலீசார் தேடி வந்தனர். சில ஆண்டுகளுக்கு முன் நண்பராக இருந்த அவர் பின்னர் ராமுவுக்கு எதிரியானார். இதனை தொடர்ந்து, அவருக்கு எதிராக, ராமு கொலை முயற்சி புகார் ஒன்றை போலீசில் அளித்திருக்கிறார்.
இதனை தொடர்ந்து, இந்த சம்பவம் நடந்திருக்க கூடும் என போலீசார் சந்தேகித்தனர். இந்த சூழலில், வழக்கு தொடர்பாக போலீசில் மணிகண்டன் உள்பட 8 பேர் சரண் அடைந்தனர். தொடர்ந்து அவர்களிடம் விசாரணை நடந்து வருகிறது.