இந்தியாவில் உலகின் மிக உயரம் வாய்ந்த ரெயில்வே பாலம்: சி.என்.என். புகழாரம்


இந்தியாவில் உலகின் மிக உயரம் வாய்ந்த ரெயில்வே பாலம்:  சி.என்.என். புகழாரம்
x

காஷ்மீரில் கட்டப்பட்டு வரும் உலகின் மிக உயரம் வாய்ந்த ரெயில்வே பாலம் பற்றி சி.என்.என். புகழாரம் தெரிவித்து உள்ளது.

ஸ்ரீநகர்,

ஜம்மு மற்றும் காஷ்மீரில் இருந்து நாட்டின் பிற பகுதிகளை இணைப்பதற்காக ஸ்ரீநகர்-ஜம்மு தேசிய நெடுஞ்சாலை 300 கி.மீ. தொலைவில் அமைந்து உள்ளது. எனினும், அடிக்கடி இந்த சாலையில் விபத்துகள் ஏற்படுகின்றன. குளிர் காலத்தின் ஒரு பகுதியில் இந்த சாலை மூடப்படும்.

இந்நிலையில், காஷ்மீரில் இருந்து நாட்டின் பிற பகுதிகளுக்கு செல்லும் வகையில் ரெயில் இணைப்பை உருவாக்க அரசு முடிவு செய்தது. இதன்படி, ஜீனப் ஆற்றின் மேலே ரெயில்வே பாலம் கட்டுவது என முடிவானது.

இதுபற்றி சி.என்.என். பத்திரிகை நிறுவனம் வெளியிட்டு உள்ள செய்தியின்படி, ஜம்மு மற்றும் காஷ்மீர் பகுதியில் உள்ள ஜீனப் ஆற்றின் மேலே 359 மீட்டர் உயரத்தில் (1090 அடி உயரம்) இந்த ஜீனப் ரெயில்வே பாலம் அமைகிறது.

1,315 மீட்டர் நீளம் கொண்ட இந்த பாலம், மணிக்கு 266 கி.மீ. வேகத்தில் பலத்த காற்று வீச்சு மற்றும் நிலநடுக்கங்களை எதிர்கொள்ளும் வலிமையுடன் உருவாகிறது.

இதனால், கத்ரா மற்றும் பனிஹால் பகுதிகளுக்கு இடையேயான தொலைவை கடக்க இதுவரை 12 மணிநேரம் எடுத்து கொள்ளும் சூழலில், ரெயில்வே பால உதவியால் அது பாதியாக குறையும்.

இரண்டாண்டுகளில் பாலம் கட்டும் பணி நிறைவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது என வடக்கு ரெயில்வே பொது மேலாளர் அஷுதோஷ் கங்கால் இன்று கூறியுள்ளார்.

பிரான்ஸ் நாட்டின் பாரீஸ் நகரில் உள்ள ஈபிள் டவரை விட 35 மீட்டர்கள் உயரத்தில் இந்த பாலம், அமைகிறது. நடப்பு 2023 ஆண்டு டிசம்பர் அல்லது அடுத்த 2024-ம் ஆண்டு ஜனவரியில் பார்வையாளர்களுக்கு திறந்து விடப்படும் என ரெயில்வே அமைச்சகம் தெரிவித்து உள்ளது.

இந்த ஜீனப் ரெயில்வே பாலம் கட்டி முடிக்கப்பட்டால், அது நாட்டின் பிற முக்கிய நகரங்களை இணைப்பதுடன், சமூக ஒருமைப்பாடு மற்றும் அரசியல் செல்வாக்கு செலுத்துவதற்கான வலிமையான ஒரு கருவியாக பிரதமர் மோடியால் பார்க்கப்படும் என்றும் சி.என்.என். தெரிவித்து உள்ளது.


Next Story