ராமர் கோவில் திறப்புவிழா: நாங்கள் கலந்து கொள்ளமாட்டோம் - சீதாராம் யெச்சூரி நிராகரிப்பு


ராமர் கோவில் திறப்புவிழா: நாங்கள் கலந்து கொள்ளமாட்டோம் - சீதாராம் யெச்சூரி நிராகரிப்பு
x
தினத்தந்தி 27 Dec 2023 12:00 AM GMT (Updated: 27 Dec 2023 12:14 AM GMT)

மதம் என்பது தனிப்பட்ட விருப்பம். அதை அரசியல் ஆதாயத்துக்கான கருவியாக மாற்றக்கூடாது என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி தெரிவித்துள்ளது.

புதுடெல்லி,

பா.ஜ.க.வின் முக்கிய திட்டங்களில் ஒன்றான அயோத்தி ராமர் கோவில், ஜனவரி 22-ம் தேதி திறக்கப்படவிருக்கிறது. அதில் பிரதமர் மோடி, மத்திய மந்திரிகள், பா.ஜ.க ஆளும் மாநில முதல்-மந்திரிகள் கலந்துகொள்ள உள்ளனர். பா.ஜ.க.வைச் சார்ந்தவர்கள் மட்டுமல்லாது, எதிர்க்கட்சிகளின் முக்கிய தலைவர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரிக்கும் அழைப்பு சென்றது. ஆனால், அவர் அந்த அழைப்பை நிராகரித்துள்ளார்.

இதுகுறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மேலிடக்குழு வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது:-

மத நம்பிக்கைகளை மதிப்பதும், தங்கள் மதநம்பிக்கையை பின்பற்றுவதற்கான ஒவ்வொரு தனிநபரின் உரிமைகளை மதிப்பதும் எங்கள் கொள்கை. மதம் என்பது தனிப்பட்ட விருப்பம். அதை அரசியல் ஆதாயத்துக்கான கருவியாக மாற்றக்கூடாது. எனவே, ராமர் கோவில் திறப்பு விழாவில் நாங்கள் கலந்து கொள்ளமாட்டோம்.

மேலும், மத நிகழ்ச்சியை அரசு நிகழ்ச்சிபோல் பா.ஜனதாவும், ஆர்.எஸ்.எஸ்.சும் மாற்றியது துரதிருஷ்டவசமானது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Next Story