ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியின் வாழ்நாள் தலைவர் பதவி: தேர்தல் ஆணையம் அதிருப்தி


ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியின் வாழ்நாள் தலைவர் பதவி:  தேர்தல் ஆணையம் அதிருப்தி
x

ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியின் வாழ்நாள் தலைவராக இருக்க முடியாது என்று ஜெகன் மோகன் ரெட்டிக்கு இந்திய தலைமை தேர்தல் ஆணையம் தெரிவித்து உள்ளது.



புதுடெல்லி,


ஆந்திர பிரதேசத்தில் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியின் ஆட்சி நடந்து வருகிறது. அதன் தலைவராக முதல்-மந்திரி ஜெகன் மோகன் ரெட்டி இருந்து வரும் நிலையில், கட்சியின் நிரந்தர தலைவராக அவர் பதவி வகிக்கும் வகையிலான தேர்தல் நடைபெற உள்ளது என ஊடகங்களில் சமீபத்தில் செய்தி வெளியானது.

இந்த நிலையில், இந்திய தலைமை தேர்தல் ஆணையம் இந்த தகவலுக்கு அதிருப்தி தெரிவித்து உள்ளது. எந்தவொரு அரசியல் கட்சியின் எந்தவொரு பதவியும் நிரந்தரம் என்று ஆக்குவதற்கான முயற்சியோ அல்லது அதற்கான சிறு குறிப்புகள் தெரிய வந்தாலும் அதனை சகித்து கொள்ள முடியாது என்று ஆணையம் தெரிவித்து உள்ளது.

குறிப்பிட்ட கால இடைவெளியில் தேர்தல் நடத்தும் நடைமுறையை மறுக்க கூடிய எந்தவொரு செயலும், இயற்கையாகவே ஜனநாயகத்திற்கு எதிரானது. தேர்தல் ஆணையத்தின் நடைமுறையில் உள்ள அறிவுறுத்தல்களை முற்றிலும் மீறும் செயலும் ஆகும் என்று தனது உத்தரவில் இந்திய தலைமை தேர்தல் ஆணையம் தெரிவித்து உள்ளது.

இதனை தொடர்ந்து, ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியின் வாழ்நாள் தலைவராக ஜெகன் மோகன் ரெட்டி இல்லை என்ற தகவலை ஊடகங்களுக்கு தெரிவித்து தெளிவுப்படுத்த வேண்டும் என்றும் தனது உத்தரவில் ஆணையம் தெரிவித்து இருக்கிறது.


Next Story