லாரி மீது ஆம்புலன்ஸ் வேன் மோதி நோயாளி சாவு


லாரி மீது ஆம்புலன்ஸ் வேன் மோதி நோயாளி சாவு
x
தினத்தந்தி 24 Oct 2023 9:45 PM GMT (Updated: 25 Oct 2023 5:56 AM GMT)

பெங்களூரு அருகே லாரி மீது ஆம்புலன்ஸ் மோதியதில் சிகிச்சைக்கு சென்ற நோயாளி உயிரிழந்தார்.

பெங்களூரு:-

லாரி மீது மோதியது

சித்ரதுர்கா மாவட்டத்தை சேர்ந்தவர் விஜய்குமார். இவர், புற்றுநோயால் பாதிக்கப்பட்டு இருந்தார். இதற்காக அவர் சித்ரதுர்காவில் ஒரு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். அங்கு அவரது உடல் நிலை மோசமானது. இதையடுத்து, சித்ரதுர்காவில் இருந்து மேல் சிகிச்சைக்காக விஜய்குமார் பெங்களூருவுக்கு அழைத்து வர முடிவு செய்யப்பட்டது.

அதன்படி, சித்ரதுர்காவில் இருந்து ஆம்புலன்சில் விஜய்குமார் உள்பட 4 பேர் பெங்களூருவுக்கு புறப்பட்டனர். பெங்களூரு புறநகர் மாவட்டம் துமகூரு-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் ஆம்புலன்ஸ் வந்து கொண்டிருந்து. அப்போது எதிர்பாராத விதமாக டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த ஆம்புலன்ஸ், அந்த சாலையில் சென்ற ஒரு லாரி மீது மோதியது.

புற்று நோயாளி சாவு

மோதிய வேகத்தில் ஆம்புலன்ஸ் முன்பகுதி நொறுங்கி சேதம் அடைந்தது. இதனால் டிரைவர், விஜய்குமார் உள்பட 4 பேரும் படுகாயம் அடைந்தார்கள். உயிருக்கு போராடிய அவர்கள் அருகில் உள்ளஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர். அங்கு சிகிச்சை பலனின்றி விஜய்குமார் இறந்து விட்டார். டிரைவர் உள்பட 3 பேருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

நோயாளியை ஆஸ்பத்திரியில் அனுமதிக்க ஆம்புலன்சை வேகமாக ஓட்டி வந்ததால் லாரி மீது மோதியது தெரியவந்துள்ளது. இதுகுறித்து நெலமங்களா போக்குவரத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story