ஆண்டர்சன்பேட்டை, ராபர்ட்சன்பேட்டையில் சாலையோரம் வாகனங்கள் நிறுத்தியவர்களிடம் அபராதம் வசூல்


ஆண்டர்சன்பேட்டை, ராபர்ட்சன்பேட்டையில்  சாலையோரம் வாகனங்கள் நிறுத்தியவர்களிடம்  அபராதம் வசூல்
x
தினத்தந்தி 13 Oct 2023 6:45 PM GMT (Updated: 13 Oct 2023 6:46 PM GMT)

ஆண்டர்சன்பேட்டை, ராபர்ட்சன்பேட்டையில் சாலையோரம் வாகனங்கள் நிறுத்தியவர்களிடம் இருந்து போலீசார் அபராதம் வசூல் செய்தனர்.

கோலார் தங்கவயல்

கோலார் மாவட்டம் ஆண்டர்சன்பேட்டை மற்றும் ராபர்ட்சன்பேட்டை தாலுகாவில் உள்ள முக்கிய சாலைகளில் வாகன போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. இதற்கு சாலைகளில் இருபுறமும் வாகனங்களை நிறுத்துவதே காரணம் என்று கூறப்படுகிறது. இந்தநிலையில் சாலையோரம் நிறுத்தப்படும் வாகனத்தின் மீது கடும் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் போலீசில் புகார் அளித்துள்ளனர்.

அந்த புகாரின் பேரில் போலீசார் நடவடிக்கை எடுத்து, சாலைகளில் இருபுறமும் உள்ள வாகனங்களை அகற்றும்படி உத்தரவிட்டனர். அதன்படி போலீசார் நடவடிக்கை எடுத்தனர். இதையடுத்து 2 நாட்கள் மட்டுமே வாகன ஓட்டிகள் இந்த விதிமுறையை கடைபிடித்தனர்.

பின்னர் மீண்டும் சாலையோரம் வாகனங்களை நிறுத்த தொடங்கினர். இதனால் அதிருப்தியடைந்த போலீசார் கடும் நடவடிக்கை எடுக்க முன் வந்தனர். அதன்படி ஆண்டர்சன்பேட்டை, ராபர்ட்சன்பேட்டையில் வாகன நெரிசல் அதிகம் உள்ள பகுதிகளில் போலீசார் தீவிர ரோந்து பணிகள் மேற்கொண்டனர்.

அப்போது தடை செய்யப்பட்ட இடங்களில் வாகனங்களை நிறுத்தியவர்களிடம் இருந்து அபராதம் வசூல் செய்தனர். அதன்படி கடந்த 2 நாட்களில் மட்டும் ஆண்டர்சன்பேட்டை, ராபர்ட்சன்பேட்டையில் சாலையோரங்களில் நிறுத்தப்பட்டது தொடர்பாக ஆயிரத்திற்கும் அதிகமான வாகன ஓட்டிகளிடம் இருந்து அபராதம் வசூல் செய்ததாக கூறப்படுகிறது.

இதற்கிடையில் இதே நிலை தொடர்ந்து நீடித்தால் வாகனங்களை பறிமுதல் செய்து, வழக்குப்பதிவு செய்ய போலீசார் முடிவு செய்துள்ளனர். எனவே வாகன ஓட்டிகள் தடை செய்யப்பட்ட இடங்களில் வாகனங்களை நிறுத்த கூடாது என்று ஆண்டர்சன்பேட்டை மற்றும் ராபர்ட்சன்பேட்டையை சேர்ந்த போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.


Next Story