கள்ளத்தொடர்பை கைவிட்டதால் பெண், கத்தியால் குத்தி கொலை


கள்ளத்தொடர்பை கைவிட்டதால்  பெண், கத்தியால் குத்தி கொலை
x

கள்ளத்தொடர்பை கைவிட்டதால் பெண்ணை கத்தியால் குத்திக் கொலை செய்த தொழிலாளியை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.

மைசூரு:

கள்ளத்தொடர்பு

மைசூரு மாவட்டம் நஞ்சன்கூடு தாலுகா அம்பாப்புரா கிராமத்தை சேர்ந்தவர் மினுக்கம்மா (வயது 45). இவரது மகன் பிரகாஷ். இவர் கிராம பஞ்சாயத்து உறுப்பினர் ஆவார். ஹனேபுரா கிராமத்தை சேர்ந்தவர் மகாதேவ நாயக் (வயது 50). கூலி தொழிலாளி. இவருக்கும், மினுக்கம்மாக்கும் இடையே கள்ளத்தொடர்பு ஏற்பட்டதாக தெரிகிறது. இதனால் இருவரும் அடிக்கடி தனிமையில் உல்லாசமாக இருந்தும் வந்துள்ளனர். இவர்களின் கள்ளக்காதல் விவகாரம் இரு வீட்டாருக்கும் தெரியவந்தது.

இதனால் மினுக்கம்மா, மகாதேவநாயக்கிடம் பேசுவதை நிறுத்தி கொண்டார். இதையடுத்து இரு குடும்பத்தினர் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. இதுதொடர்பாக போலீசில் புகாரும் அளிக்கப்பட்டது. போலீசார் இரு குடும்பத்தினரையும் அழைத்து சமாதானம் பேசி அனுப்பி வைத்தனர்.

கத்தியால் குத்திக்கொலை

இந்த நிலையில், மினுக்கம்மா கள்ளத்தொடர்பை கைவிட்டதால் அவர் மீது மகாதேவநாயக் ஆத்திரத்தில் இருந்து வந்துள்ளார். மேலும் அவரை கொலை செய்யவும் திட்டமிட்டார். இந்த நிலையில் சம்பவத்தன்று மினுக்கம்மா அந்தப்பகுதியில் உள்ள கடைக்கு சென்றுள்ளார். அப்போது அங்கு வந்த மகாதேவநாயக், மினுக்கம்மாவை தடுத்து நிறுத்தி தகராறு செய்துள்ளார்.

அந்த சந்தர்ப்பத்தில் மகாதேவநாயக், தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் அவரை சரமாரியாக குத்தினார். இதில் மினுக்கம்மா, சம்பவ இடத்திலேயே ரத்தவெள்ளத்தில் துடி, துடித்து பரிதாபமாக உயிரிழந்தார். இதையடுத்து மகாதேவநாயக் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார்.

போலீஸ் வலைவீச்சு

இதுபற்றிய தகவல் அறிந்ததும் கலவந்தே போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து பார்வையிட்டனர். பின்னர் போலீசார், கொலையான மினுக்கம்மாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் நடத்திய விசாரணையில், கள்ளத்தொடர்பை கைவிட்டதால் மினுக்கம்மாவை மகாதேவநாயக் கத்தியால் குத்தி கொலை செய்தது தெரியவந்தது.

இதுதொடர்பாக கலவந்தே போலீசார் வழக்குப்பதிவு செய்து மகாதேவநாயக்கை வலைவீசி தேடி வருகிறார்கள்.


Next Story