ஹாசன் அருகே சொத்துத்தகராறில் கழுத்தை நெரித்து விவசாயி கொலை


ஹாசன் அருகே சொத்துத்தகராறில் கழுத்தை நெரித்து விவசாயி கொலை
x

ஹாசன் அருகே சொத்துத்தகராறில் விவசாயியை கழுத்தை நெரித்து கொன்ற மனைவி, அத்தையை போலீசார் கைது செய்துள்ளனர்.

ஹாசன்:

விவசாயி

ஹாசன் தாலுகா பஸ்திஹள்ளி கிராமத்தில் உள்ள மொசலே ஒசஹள்ளி பகுதியை சேர்ந்தவர் கிருஷ்ணகவுடா(வயது 53). விவசாயி. இவரது மனைவி ஜோதி (51). இத்தம்பதிக்கு சிவகுமார், சசிகுமார் என்ற இரண்டு மகன்கள் உள்ளனர். ஜோதியுடன் அவரது தாய் புட்டம்மாவும் வசித்து வந்தார். இந்த நிலையில் கடந்த சில நாட்களாக மனைவி ஜோதி, அத்தை புட்டம்மா ஆகியோர் சேர்த்து கிருஷ்ணகவுடாவுடன் தகராறு செய்ததாக கூறப்படுகிறது.

இதையறிந்த கிருஷ்ணகவுடாவின் சகோதரர் சாமிகவுடா, ஜோதி மற்றும் அவரது தாய் புட்டம்மாவை சந்தித்து சமாதான பேச்சுவார்த்தை நடத்தினார். ஆனாலும் தொடர்ந்து கணவன், மனைவிக்கு இடையே குடும்பத்தகராறு ஏற்பட்டுள்ளது. இதற்கிடையே கடந்த 6-ந் தேதி இரவு அண்ணன் சாமி கவுடாவின் மகள் பூப்புனித நீராட்டு விழாவில் கலந்து கொள்ள சென்ற நிலையில் கிராமத்து ஒதுக்கப்புறத்தில் கிருஷ்ணகவுடா படுகொலை செய்யப்பட்டு பிணமாக கிடந்தார்.

கழுத்தை நெரித்து கொலை

இதை பார்த்த அப்பகுதி மக்கள் கோரூர் போலீசாருக்கு தகவல் அளித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் கொலையான கிருஷ்ணகவுடாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அப்போது கிருஷ்ணகவுடாவின் உடலில் காயங்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

இதையடுத்து சந்தேகத்தின்பேரில் போலீசார் கிருஷ்ணகவுடாவின் மனைவி ஜோதி மற்றும் அத்தை புட்டம்மாவிடம் விசாரணை நடத்தினர். அப்போது அவர்கள், போலீசாரிடம் முன்னுக்கு பின் முரணாக பதிலளித்தனர். இதனால் சந்தேகமடைந்த போலீசார் அவர்களிடம் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தினர். அதில், சொத்து தகராறில் கிருஷ்ண கவுடாவை இரும்பு கம்பியால் தாக்கி பின்னர் கழுத்தை நெரித்து கொலை செய்ததாக தெரிவித்தனர். மேலும் விபத்தில் பலியானதாக சாலையோரம் கிருஷ்ணகவுடாவின் உடலை வீசி சென்றது தெரியவந்தது.

கைது

இதையடுத்து 2 பேரையும் போலீசார் கைது செய்தனர். கைதான 2 பேர் மீதும் கோரூர் போலீசார் கொலை வழக்குப்பதிவு செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


Next Story