டிராகன் பழங்கள் சாகுபடியில் ஆர்வம் காட்டும் விவசாயிகள்


டிராகன் பழங்கள் சாகுபடியில் ஆர்வம் காட்டும்  விவசாயிகள்
x
தினத்தந்தி 14 Oct 2023 6:45 PM GMT (Updated: 14 Oct 2023 6:46 PM GMT)

கோலார் தங்கவயலில் டிராகன் சாகுபடியில் ஆர்வம் காட்டும் விவசாயிகள், ஆண்டிற்கு ரூ.5 லட்சம் வருவாய் கிடைப்பதாக கூறியுள்ளனர்.

கோலார்

டிராகன் பழங்கள்

கோலார் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக தக்காளி விலை உயர்ந்து, மக்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. தற்போது தக்காளி விலை குறைந்துள்ளது. இதனால் விவசாயிகள் அதனை சாகுபடி செய்வதை குறைத்துவிட்டனர்.

இதற்கிடையில் நெல், உருளைக் கிழங்கு ஆகியவை சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. இதில் தற்போது அதிகளவு லாபம் இல்லை என்று கூறப்படுகிறது.

இந்தநிலையில் வணிக பயிர்களுக்கு மாறியுள்ளனர். அதன்படி அதிகளவு லாபம் தரக்கூடிய டிராகன் மரக்கன்றுகளுக்கு முக்கியத்துவம் கொடுக்க தொடங்கிவிட்டனர். இதில் அதிகளவு லாபம் கிடைப்பதாக கூறப்படுகிறது. கோலார் தங்கவயல் விவசாயிகளின் பிரதான தொழிலாளாக இது மாறிவிட்டது.

இந்தநிலையில் கோலார் தங்கவயல் தாலுகா குரூர் கிராமத்தை சேர்ந்த கோபி என்ற விவசாயி, டிராகன் பழங்களை சாகுபடி செய்து அதிகளவு லாபம் ஈட்டியுள்ளார்.

இவர் ஏற்கனவே நெல், உருளைக்கிழங்கு, தக்காளி, பட்டுப்புழு வளர்ப்பு பணிகளில் ஈடுபட்டு வந்தார். சமீப காலமாக இதில் அதிகளவு லாபம் இல்லை என்று கூறப்படுகிறது. இதனால் அவர் டிராகன் பழங்களை சாகுபடி செய்ய தொடங்கிவிட்டார். இதன் மூலம் ஆண்டிற்கு ரூ.5 லட்சம் வரை அவர் வருவாய் ஈட்டி வருவதாக கூறப்படுகிறது.

30 ஆண்டுகள் சாகுபடி

இதுகுறித்து விவசாயி கோபி கூறியதாவது:-

இந்த டிராகன் பழத்திற்கு மார்க்கெட்டில் மவுசு அதிகம். இதனால் இதனை சாகுபடி செய்ய முடிவு செய்தேன். இதற்காக யுடியூப் சேனலில் டிராகன் பழம் சாகுபடி செய்வது எப்படி என்ற வீடியோக்களை பார்த்தேன். அதன்படி 2 ஏக்கர் நிலத்தில் இந்த டிராகன் பழங்களை பயிரிட்டேன்.

இந்த டிராகன் மரக்கன்றை ஒரு முறை நடவு ெசய்தால் போதும், 25 முதல் 30 ஆண்டுகள் வரை சாகுபடி செய்ய பயன்படுத்தி கொள்ளலாம். சராசரியாக ஆண்டிற்கு 9 முறை இந்த டிராகன் பழங்களை அறுவடை செய்ய முடியும்.

இதனால் ஆண்டிற்கு ரூ.4 முதல் ரூ.5 லட்சம் வரை வருவாய் ஈட்ட முடியும். மார்க்கெட்டில் தற்போது இந்த டிராகன் பழங்களுக்கு மவுசு அதிகம். ஒரு கிலோ ரூ.140 முதல் ரூ.170 வரை விற்பனை ெசய்யப்பட்டு வருகிறது. மழை, வெயில் ஆகிய 2 காலக்கட்டங்களிலும் இந்த டிராகன் பழங்களை சாகுபடி செய்ய முடியும். குறைந்த அளவு மட்டுமே தண்ணீர் தேவைப்படும்.

மேலும் அதிகளவு உரங்களை பயன்படுத்த தேவையில்லை. ஒரு முறை இந்த மரக்கன்றுகளை நட்டு வைத்தால் போது, ஒரு ஆண்டுகளில் வளர்ந்து விளைச்சல் அடைந்துவிடும். பின்னர் அந்த பழத்தை அறுவடை செய்து கொள்ளலாம். இதனால் செலவு குறைந்தாலும் வருவாய் அதிகம் கிடைக்கிறது.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story