சட்டவிரோதமாக பதுக்கிய ரூ. 4 லட்சம் பட்டாசுகள் பறிமுதல்


சட்டவிரோதமாக பதுக்கிய  ரூ. 4 லட்சம் பட்டாசுகள் பறிமுதல்
x
தினத்தந்தி 16 Oct 2023 6:45 PM GMT (Updated: 16 Oct 2023 6:46 PM GMT)

கே.ஆர்.நகர் டவுனில் சட்டவிரோதமாக பதுக்கிய ரூ.5 லட்சம் பட்டாசுகளை போலீசார் பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

மைசூரு:

தீபாவளி பண்டிகை

தீபாவளி பண்டிகைக்கு இன்னும் ஒரு மாதமே இருப்பதால் வெளிமாநிலங்களில் இருந்து பட்டாசுகள் லாரி, சரக்கு வாகனங்களில் கர்நாடகத்திற்கு கொண்டு வரப்பட்டு வருகிறது. குறிப்பாக குட்டி ஜப்பான் என்றழைக்கப்படும் தமிழ்நாடு சிவகாசியில் இருந்து கர்நாடகத்திற்கு அதிகளவு பட்டாசுகள் கொண்டு வரப்படுகிறது.

இந்தநிலையில், கடந்த 8-ந்தேதி சிவகாசியில் இருந்து சரக்கு வாகனங்களில் பட்டாசுகள் ஏற்றி கொண்டு கர்நாடக மாநில எல்லையான அத்திப்பள்ளிக்கு வந்தது.

ஊழியர்கள் சரக்கு வாகனங்களில் இருந்து பட்டாசுகளை இறக்கி கொண்டிருந்தனர். அப்போது அந்த வாகனங்களில் தீப்பிடித்து எரிந்து பட்டாசுகள் நாலாபுறமும் சிதறி வெடித்தது. மேலும் சரக்கு வாகனங்கள் முழுவதும் எரிந்து நாசமாகின. இந்த தீவிபத்தில் 16 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த சம்பவம் கர்நாடகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

பட்டாசு வெடிக்க தடை

இந்தநிலையில், வெடி விபத்தில் 16 பேர் பலியான சம்பவத்தை தொடர்ந்து திருமணம், அரசியல் கட்சி விழா உள்ளிட்ட பொது நிகழ்ச்சிகளில் பட்டாசுகள் வெடிக்க கர்நாடக அரசு தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.

மேலும் போலீசார் சட்டவிரோதமாக பட்டாசுகள் பதுக்கல் மற்றும் விற்பனை செய்கிறார்களா? என மாநிலம் முழுவதும் சோதனை நடத்தி வருகிறார்கள். இந்த சோதனையில் இதுவரை கோடிக்கணக்கில் பட்டாசுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

இந்தநிலையில், மைசூரு மாவட்டம் கே.ஆர்.நகர் டவுன் பகுதியில் சட்டவிரோதமாக குடோனில் பட்டாசுகள் பதுக்கி வைத்திருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சோதனை செய்தனர். அப்போது அந்த குடோனில் சட்டவிரோதமாக பட்டாசுகள் பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது.

2 பேர் கைது

இதையடுத்து, ரூ. 4 லட்சம் மதிப்பிலான 1200 கிலோ பட்டாசுகளை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் இதுதொடர்பாக குடோன் உரிமையாளர்கள் ஆஞ்சநேயர் படாவணே பகுதியை சேர்ந்த லோகேஷ், ரவீந்திரன் ஆகிய 2 பேரை போலீசார் கைது செய்தனர். இந்த சம்பவம் குறித்து கே.ஆர்.நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.


Next Story