சிக்கமகளூருவில் நகரசபை தலைவர் மீண்டும் ராஜினாமா கடிதத்தை வாபஸ் பெற்றார்


சிக்கமகளூருவில் நகரசபை தலைவர் மீண்டும் ராஜினாமா கடிதத்தை வாபஸ் பெற்றார்
x
தினத்தந்தி 16 Oct 2023 6:45 PM GMT (Updated: 16 Oct 2023 6:45 PM GMT)

சிக்கமகளூருவில் நகரசபை தலைவர் மீண்டும் ராஜினாமா கடிதத்தை வாபஸ் பெற்றார். இதனால் பா.ஜனதா வட்டாரத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

சிக்கமகளூரு-

சிக்கமகளூருவில் நகரசபை தலைவர் மீண்டும் ராஜினாமா கடிதத்தை வாபஸ் பெற்றார். இதனால் பா.ஜனதா வட்டாரத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

சிக்கமகளூரு நகரசபை தலைவர்

சிக்கமகளூரு நகரசபை தலைவராக இருந்து வந்தவர் வேணுகோபால். பா.ஜனதா கட்சியை சேர்ந்த இவர் கடந்த 3 மாதங்களுக்கு முன்பு தனது தலைவர் பதவியை ராஜினாமா செய்தார். அந்த ராஜினாமா கடிதத்தை மாவட்ட கலெக்டர் மீனா நாகராஜிடம் கொடுத்தார். ஆனால் அப்போது வேணுகோபாலின் ராஜினாமா கடிதம் அங்கீகரிக்கப்படவில்லை. பின்னர் தனது ராஜினாமா கடிதத்ைத அவர் கலெக்டரிடம் சென்று வாபஸ் பெற்றார்.

அப்போது சிக்கமகளூரு நகரசபை துணை தலைவராக இருந்த உமாதேவியும் தனது பதவியை ராஜினாமா செய்தார். இந்தநிலையில், கடந்த 4-ந்தேதி மீண்டும் சிக்கமகளூரு நகரசபை தலைவர் பதவியை வேணுகோபால் ராஜினாமா செய்வதாக அறிவித்தார். அதன்படி அதற்கான கடிதத்தை மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு நேரில் சென்று வேணுகோபால் மாவட்ட கலெக்டர் மீனா நாகராஜிடம் வழங்கினார்.

ராஜினாமா செய்தேன்

அப்போது, பா.ஜனதா கட்சியின் வேண்டுகோளுக்கு இணங்க நகரசபை பதவியை ராஜினாமா செய்தேன் என வேணுகோபால் கூறினார். இந்தநிலையில், அடுத்த நகரசபை தலைவர் யாரை தேர்ந்தெடுக்கலாம் என பா.ஜனதா கட்சியினர் ஆலோசனை செய்து வந்தனர்.

இந்தநிலையில் கடந்்த 2 நாட்களுக்கு முன்பு வேணுகோபால் கலெக்டர் அலுவலகத்திற்கு சென்று மீண்டும் நகரசபை தலைவர் பதவி ராஜினாமா கடிதத்தை வாபஸ் பெற்றார். ஆனால், அதன்பின்னர் வேணுகோபாலை காணவில்லை. அவரை கட்சியினர் தொடர்பு கொண்டால் சுவிட்ச்- ஆப் என வருகிறது. இதனால் சிக்கமகளூரு பா.ஜனதாவினர் என்ன செய்வது என்று தெரியாமல் திகைத்து போய் உள்ளனர்.

பா.ஜனதா கட்சி சித்தாந்தம்

இதுகுறித்து சிக்கமகளூரு மாவட்ட பா.ஜனதா தலைவர் கல்முருடப்பா நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறுகையில், பா.ஜனதா கட்சிக்கு என ஒரு சித்தாந்தம் உள்ளது. அதனை வேணுகோபால் மீறி உள்ளார். அவர் எதற்காக ராஜினாமா கடிதத்தை திரும்ப பெற்றார். தற்போது எங்கு உள்ளார் என்பது இதுவரை தெரியவில்லை. வேணுகோபால் மீது கட்சி சார்பில் நடவடிக்கை எடுக்கப்படும்.

மேலும் விரைவில் சிக்கமகளூரு நகரசபை தலைவர் பதவிக்கு புதியதாக ஒருர் நியமனம் செய்யப்படுவார். வேணுகோபால் யார் தூண்டுதலில் இதுபோன்று செயல்படுகிறார் என்பது குறித்து விசாரணை நடத்தப்பட உள்ளது என்று கூறினார். நகரசபை தலைவர் மீண்டும் ராஜினாமா கடிதத்தை வாபஸ் பெற்றதால் பா.ஜனதா வட்டாரத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.


Next Story