மைசூருவில் விதிமீறல்களை தடுக்க போக்குவரத்து போலீசார் தீவிர கண்காணிப்பு


மைசூருவில் விதிமீறல்களை தடுக்க போக்குவரத்து போலீசார் தீவிர கண்காணிப்பு
x

விதிமீறல்களை தடுக்க போக்குவரத்து போலீசார் நகர் முழுவதும் தீவிரமாக கண்காணிக்க வேண்டும் என போலீஸ் கமிஷனர் சந்திரகுப்தா உத்தரவிட்டுள்ளார்.

மைசூரு:

வாகன சாகசம்

மைசூரு மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக போக்குவரத்து விதிமீறல்கள் அதிகரித்து வருகிறது. வாகன ஓட்டிகள் தங்கள் இருசக்கர வாகனத்தை அதிவேகமாக இயக்குகின்றனர். மேலும், சாலையில் வாகன சாகசம் செய்கின்றனர். இதனால் பொதுமக்கள் பாதிக்கப்படுகின்றனர்.

அவ்வாறு மோட்டார் சைக்கிள்களை இயக்குபவர்கள் முறையாக தலைகவசம் அணியாமல், ஒரு மோட்டார் சைக்கிளில் 3 பேர் பயணிப்பது, மது அருந்துவது, மற்றும் செல்போன் பேசுவதால் விபத்துகள் நடக்கின்றன. அவற்றை தடுக்க மைசூரு மாவட்ட போலீஸ் கமிஷனர் சந்திரகுப்தா நடவடிக்கை எடுத்து வருகிறார். இதுகுறித்து அவர் கூறியதாவது:-

சாலையில் அதிவேமாக செல்வோரை கண்காணிக்க போக்குவரத்து போலீசார் தீவிரம் காட்ட வேண்டும். நகரின் பல்வேறு பகுதிகளில் ரோந்து செல்ல வேண்டும். மேலும், தலைகவசம் இல்லாமலும், ஒரு மோட்டார் சைக்கிளில் 2 பேருக்கு மேல் பயணம் செய்வோரை கண்டறிந்து அவர்களுக்கு அபராதம் விதிக்க வேண்டும்.

கடும் நடவடிக்கை

மைசூரு நகரின் முக்கிய சாலைகள் உள்பட அனைத்து பகுதிகளிலும் போக்குவரத்து போலீசார் பணியில் ஈடுபடுத்தப்பட வேண்டும். மேலும், அந்த பகுதிகளில் வாகன சோதனை நடத்தி ஓட்டுனர் உரிமம் இல்லாமலும், 18 வயது பூர்த்தியடையாமலும் வாகனங்களை ஓட்டுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

குறிப்பாக மைசூரு பவுன்டெயின் சர்க்கிள், மகாதேவபுரா ரோடு, தேவே கவுடா சர்க்கிள், கே.ஆர்.சர்க்கிள், விஜயா பேங்க் சர்க்கிள் போன்ற பகுதிகளில் கண்காணிப்பை தீவிரப்படுத்த வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

கடந்த 23-ந் தேதி மட்டும், மைசூருவில் போக்குவரத்து விதிகளை மீறியதாக 246 வழக்குகள் பதிவாகி உள்ளன. அதில் தலைகவசம் இல்லாமல் மோட்டார் சைக்கிள் ஓட்டியதாக 218 வழக்குகள் பதிவாகியது குறிப்பிடத்தக்கது.


Next Story