வாலிபர் கத்தியால் குத்திக்கொலை: வியாபாரிகள் 2 பேருக்கு ஆயுள் தண்டனை


வாலிபர் கத்தியால் குத்திக்கொலை:   வியாபாரிகள் 2 பேருக்கு ஆயுள் தண்டனை
x
தினத்தந்தி 12 Oct 2023 6:45 PM GMT (Updated: 12 Oct 2023 6:46 PM GMT)

வாலிபர் கத்தியால் குத்திக்கொலை செய்யப்பட்ட வழக்கில் வியாபாரிகள் 2 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து சிவமொக்கா மாவட்ட கோர்ட்டு தீர்ப்பு வழங்கியது.

சிவமொக்கா-

வாலிபர் கத்தியால் குத்திக்கொலை செய்யப்பட்ட வழக்கில் வியாபாரிகள் 2 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து சிவமொக்கா மாவட்ட கோர்ட்டு தீர்ப்பு வழங்கியது.

வியாபாரிகள்

சிவமொக்கா மாவட்டம் சிகாரிப்புரா தாலுகா டவுன் ஆஷ்ரயா பகுதியை சேர்ந்தவர் சையது இஷாக் (வயது20). அதேப்பகுதியை சேர்ந்தவர் நவ்ஷத் (21). இவர்கள் 2 பேரும் நண்பர்கள் ஆவர். சையது இஷாக், நவ்ஷத் ஆகிய 2 பேரும் துணி வியாபாரம் செய்து வந்தனர். இவர்கள் 2 பேரும் மோட்டார் சைக்கிளில் சிகாரிப்புரா தாலுகா மற்றும் அதனை சுற்றி உள்ள கிராமங்களுக்கு சென்று துணி வியாபாரம் செய்வார்கள்.

இந்தநிலையில், கடந்த 2021-ம் ஆண்டு ஜனவரி 1- ந்தேதி சையது இஷாக், நவ்ஷத் ஆகிய 2 பேரும் மோட்டார் சைக்கிள்களில் வியாபாரத்திற்கு சென்றனர். பின்னர் மாலை, வியாபாரம் முடிந்து 2 பேரும் சிகாரிப்புரா டவுனுக்கு வந்தனர். இதையடுத்து அப்பகுதியில் உள்ள மதுபான கடைக்கு அவர்கள் 2 பேரும் மதுகுடிக்க சென்றனர். அங்கு வைத்து சையது இஷாக், நவ்ஷத் மதுகுடித்தனர்.

மதுபோதை

பின்னர் அங்கிருந்து ஆஷ்ரயா பகுதிக்கு 2 பேரும் மோட்டார் சைக்கிள்களில் சென்றனர். அப்போது, அவர்கள் மதுபோதையில் கத்தி கூச்சலிட்டு கொண்டு இருந்தனர். இதனை அதேப்பகுதியை சேர்ந்த மனோஜ் அவர்களிடம் தட்டி கேட்டு்ள்ளார். அப்போது அவர்கள் இடையே தகராறு ஏற்பட்டது. இதில், ஆத்திரமடைந்த சையது இஷாக், நவ்ஷத் ஆகிய 2 பேரும் தாங்கள் வைத்திருந்த கத்தியை எடுத்து மனோஜை குத்திவிட்டு அங்கிருந்து தப்பிசென்றனர்.

இதுகுறித்து சிகாரிப்புரா டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து சையது இஷாக், நவ்சத்தை கைது செய்து சிறையில் அடைத்தனர். பின்னர் அவர்கள் 2 பேரும் ஜாமீனில் வெளியே வந்தனர். இதுதொடர்பான வழக்கு சிவமொக்கா மாவட்ட கோர்ட்டில் நடந்து வந்தது.

ஆயுள் தண்டனை

போலீசார் கோர்ட்டில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர். இந்த வழக்கின் விசாரணை நிறைவு பெற்றதை தொடர்ந்து நீதிபதி பல்லவி தீர்ப்பு கூறினார். வாலிபரை கத்தியால் குத்தி கொலை செய்த சையது இஷாக், நவ்சத் ஆகிய 2 பேருக்கும் ஆயுள் தண்டனையும், ரூ. 1 லட்சம் அபாரதமும் விதித்து உத்தரவிட்டார்.


Next Story