கல்லூரியில் சீட் வழங்க 11 மாணவர்களிடம் லஞ்சம்- பேராசிரியர் உள்பட 4 பேர் கைது

கல்லூரியில் சீட் வழங்க 11 மாணவர்களிடம் லஞ்சம் பெற்ற பேராசிரியர் உள்பட 4 பேரை போலீசார் கைது செய்தனர்.
வசாய்,
கல்லூரியில் சீட் வழங்க 11 மாணவர்களிடம் லஞ்சம் பெற்ற பேராசிரியர் உள்பட 4 பேரை போலீசார் கைது செய்தனர்.
ரூ.30 ஆயிரம்
தானே மாவட்டம் மிராரோட்டை சேர்ந்த ஒருவர் தனது மகளை அங்குள்ள கல்லூரியில் சேர்த்து இருந்தார். அண்மையில் அந்த கல்லூரி மூடப்பட்டதை தொடர்ந்து மகளுக்கு மற்றொரு கல்லூரியில் சீட் தருமாறு விண்ணப்பித்து இருந்தார். இதற்கு ரூ.30 ஆயிரம் லஞ்சம் தந்தால் மகளுக்கு கல்லூரியில் சீட் தருவதாக கல்லூரி அலுவலக கண்காணிப்பாளர் சந்தோஷ், பேராசிரியர் குப்தா மற்றும் சீனியர் உதவியாளர் ஸ்ரேயா சந்தோஷ் ஆகியோர் தெரிவித்தனர்.
இதையடுத்து நடத்திய பேரத்தில் ரூ.15 ஆயிரம் தருவதாக கூறிய சம்பந்தப்பட்ட நபர், பின்னர் தானே லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் அளித்தார்.
போலீசில் சிக்கினர்
இந்த புகாரின் படி போலீசார் யோசனைப்படி லஞ்சபணத்தை கல்லூரிக்கு கொண்டு சென்றார். அங்கிருந்த பேராசியர் குப்தாவிடம் வழங்கிய போது அவர் அலுவலக கண்காணிப்பாளர் சந்தோஷ்விடம் வழங்கும்படி தெரிவித்தார். இதன்படி பணத்தை அவர் வாங்கிய போது லஞ்ச ஒழிப்பு போலீசார் கையும் களவுமாக அவரை பிடித்து கைது செய்தனர்.
பின்னர் இந்த வழக்கில் தொடர்புடைய பாந்திரா தொழில்நுட்ப உதவி இயக்குநர் ரூபாலி (வயது50), கல்லூரி பேராசியர் குப்தா, கல்லூரி உதவியாளர் ஸ்ரேயா சந்தோஷ் ஆகியோரும் சிக்கினர். இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து நடத்திய விசாரணையில் இதே போன்று 14 மாணவர்களிடம் ரூ.30 ஆயிரம் லஞ்சம் கேட்டது தெரியவந்தது.
இதைத்தொடர்ந்து கல்லூரி அலுவலகத்தில் போலீசார் சோதனை நடத்தியதில் 11 மாணவர்களிடம் இருந்து பெற்ற ரூ.3 லட்சத்து 15 ஆயிரத்தை பறிமுதல் செய்தனர்.






