திருமணத்திற்கு மறுத்ததால் 17 வயது சிறுமிக்கு கத்திக்குத்து; வாலிபர் வெறிச்செயல்


திருமணத்திற்கு மறுத்ததால் 17 வயது சிறுமிக்கு கத்திக்குத்து; வாலிபர் வெறிச்செயல்
x
தினத்தந்தி 5 Aug 2023 7:15 PM GMT (Updated: 5 Aug 2023 7:15 PM GMT)

திருமணத்திற்கு மறுத்த சிறுமியை கத்தியால் குத்தி கொல்ல முயன்ற வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

மும்பை,

திருமணத்திற்கு மறுத்த சிறுமியை கத்தியால் குத்தி கொல்ல முயன்ற வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

திருமணத்திற்கு மறுப்பு

மும்பையை சேர்ந்த 17 வயது சிறுமி ஒருவர் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வருகிறார். அவருக்கு தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்த அப்துல் சேக் (வயது22) என்ற வாலிபருடன் பழக்கம் ஏற்பட்டது. நாளடைவில் சிறுமியை அந்த வாலிபர் காதலித்து வந்தார். மேலும் தன்னை திருமணம் செய்துகொள்ளுமாறு சிறுமியை அவர் கட்டாயப்படுத்தியதாக தெரிகிறது. ஆனால் அப்துல் சேக்கின் நடவடிக்கை சிறுமிக்கு பிடிக்காததால் திருமணம் செய்ய மறுத்து உள்ளார். மேலும் அப்துல் சேக்குடனான தொடர்பை அவர் துண்டித்து கொண்டார். இந்த நிலையில் அப்துல் சேக் கடைசியாக ஒருமுறை பேச விரும்புவதாக கூறி மரோல் பஸ் டிப்போவிற்கு வருமாறு சிறுமியை அழைத்துள்ளார்.

கொல்ல முயன்ற வாலிபர் கைது

இதன்படி சிறுமி அங்கு சென்றுள்ளார். அப்போது சிறுமிக்கும், வாலிபருக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால் ஆத்திரமடைந்த அப்துல் சேக் தான் வைத்திருந்த கத்தியால் சிறுமியின் வயிறு மற்றும் தொடைகளில் சரமாரியாக குத்தினார். இதில் படுகாயம் அடைந்த சிறுமி ரத்த வெள்ளத்தில் சரிந்தார். இதையடுத்து வாலிபர் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த பவாய் போலீசார் உயிருக்கு போராடிக்கொண்டு இருந்த சிறுமியை மீட்டு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிறுமிக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது குறித்து போலீசார் கொலை முயற்சி வழக்கு பதிவு செய்து தப்பி சென்ற அப்துல் சேக்கை தேடி வந்தனர். சுமார் 3 மணி நேரத்திற்குள் அவரை பிடித்து போலீசார் கைது செய்தனர்.


Next Story