ஒர்லி கடலில் மூழ்கி 2 சிறுவர்கள் பலி- 3 பேருக்கு தீவிர சிகிச்சை

ஒர்லி கடலில் மூழ்கி 2 சிறுவர்கள் பலியாகினர். மேலும் 3 பேருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
மும்பை,
ஒர்லி கடலில் மூழ்கி 2 சிறுவர்கள் பலியாகினர். மேலும் 3 பேருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
கடலில் மூழ்கினர்
மும்பை ஒர்லி கோலிவாடா மீனவர் காலனி பகுதியில் நேற்று மாலை 3.30 மணி அளவில் 5 சிறுவர்கள் கடலில் இறங்கி விளையாடி கொண்டிருந்தனர். அப்போது ராட்சத அலை ஒன்று விளையாடி கொண்டிருந்த 5 பேரையும் சுருட்டி உள்ளே இழுத்து சென்றது. இதில் 5 சிறுவர்களும் தண்ணீரில் மூழ்கினர். இதனை கண்ட அங்கிருந்த மீனவர்கள் உடனடியாக கடலில் இறங்கி தேடினர்.
தகவல் அறிந்த தீயணைப்பு படையினரும் அங்கு சென்று கடலில் மூழ்கிய 5 சிறுவர்களை தேடிவந்தனர். சிலநிமிட இடைவெளியில் மூழ்கிய 5 பேரை மீட்டு கரைக்கு கொண்டு வந்தனர்.
2 சிறுவர்கள் பலி
பின்னர் அருகில் உள்ள ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு டாக்டர்கள் நடத்திய பரிசோதனையில் 2 சிறுவர்கள் பலியானது தெரியவந்தது. மற்ற 3 சிறுவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து நடத்திய விசாரணையில் பலியான சிறுவர்கள் கார்த்திக் சவுத்ரி (வயது8), சவிதா பால் (12) எனவும், மும்பை ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருபவர்கள் கவுதம் பாட்டீல் (13), ஆர்யன் சவுத்ரி (10), ஓம் பால் (14) என்பதும் தெரியவந்தது.






