2 பஸ்கள் பயங்கர மோதல்; அமர்நாத் யாத்திரை சென்று திரும்பிய 6 பக்தர்கள் பலி - 20 பேர் காயம்


2 பஸ்கள் பயங்கர மோதல்; அமர்நாத் யாத்திரை சென்று திரும்பிய 6 பக்தர்கள் பலி - 20 பேர் காயம்
x
தினத்தந்தி 29 July 2023 7:30 PM GMT (Updated: 29 July 2023 7:31 PM GMT)

2 தனியார் பஸ்கள் மோதிய பயங்கர விபத்தில் அமர்நாத் யாத்திரை சென்று திரும்பிய பக்தர்கள் 6 பேர் உடல் நசுங்கி பலியானார்கள். 20 பேர் காயம் அடைந்தனர்.

மும்பை,

2 தனியார் பஸ்கள் மோதிய பயங்கர விபத்தில் அமர்நாத் யாத்திரை சென்று திரும்பிய பக்தர்கள் 6 பேர் உடல் நசுங்கி பலியானார்கள். 20 பேர் காயம் அடைந்தனர்.

பயங்கர விபத்து

ஹிங்கோலியை சேர்ந்த பக்தர்கள் குழு அமர்நாத் புனித யாத்திரை சென்று விட்டு தனியார் பஸ்சில் திரும்பினர். இந்த பஸ் நேற்று அதிகாலை 2.30 மணியளவில் புல்தானா மாவட்டம் மல்காப்பூர் டவுனில் உள்ள மேம்பாலத்தில் வந்து கொண்டு இருந்தது. எதிர்திசையில் நாசிக் நோக்கி மற்றொரு தனியார் பஸ் பயணிகளுடன் சென்றது. அப்போது லாரியை முந்த முயன்ற இந்த பஸ்சும், அமர்நாத் யாத்திரை பயணிகள் பஸ்சும் கண்ணிமைக்கும் நேரத்தில் நேருக்கு நேர் மோதிக்கொண்டன. இந்த பயங்கர விபத்தில் 2 பஸ்களும் பலத்த சேதம் அடைந்தன. குறிப்பாக பக்தர்கள் வந்த பஸ் சுக்குநூறாக நொறுங்கியது.

6 பக்தர்கள் பலி

இந்த விபத்தில் அமர்நாத் யாத்திரை பஸ்சில் பயணித்த பக்தர்கள் 6 பேர் உடல்நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தனர். இதில் 3 பெண்கள் அடங்குவர். மேலும் பயணிகள் 20 பேர் காயம் அடைந்தனர். அவர்கள் அனைவரும் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர். அவர்களுக்கு அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.


Next Story