துப்பாக்கி முனையில் டிரைவரை மிரட்டி இரும்பு கம்பிகளுடன் லாரியை கடத்தி சென்ற 4 பேர் கைது


துப்பாக்கி முனையில் டிரைவரை மிரட்டி இரும்பு கம்பிகளுடன் லாரியை கடத்தி சென்ற 4 பேர் கைது
x
தினத்தந்தி 28 Sep 2022 4:15 AM GMT (Updated: 28 Sep 2022 4:15 AM GMT)

துப்பாக்கி முனையில் டிரைவரை மிரட்டி இரும்பு கம்பிகளுடன் லாரியை கடத்தி சென்ற கும்பலை சேர்ந்த 4 பேரை போலீசார் கைது செய்தனர்.

வசாய்,

துப்பாக்கி முனையில் டிரைவரை மிரட்டி இரும்பு கம்பிகளுடன் லாரியை கடத்தி சென்ற கும்பலை சேர்ந்த 4 பேரை போலீசார் கைது செய்தனர்.

லாரி கடத்தல்

பால்கர் மாவட்டம் மும்பை-ஆமதாபாத் நெடுஞ்சாலையில் வஜ்ரேஷ்வரி-சிர்சாட் இடையே கடந்த 25-ந் தேதி அதிகாலையில் இரும்பு கம்பிகள் ஏற்றி கொண்டு கன்டெய்னர் லாரி ஒன்று சென்று கொண்டிருந்தது. அப்போது வேகமாக முந்தி சென்ற கார் ஒன்று கன்டெய்னர் லாரியை வழிமறித்தது. காரில் இருந்து இறங்கிய கும்பல் கையில் துப்பாக்கியை காட்டி டிரைவரை மிரட்டினர். பின்னர் அவரை பின்இருக்கையில் தள்ளி விட்டு கன்டெய்னர் லாரியை கும்பல் கடத்தி சென்றனர். சிறிது தொலைவு சென்ற பின்னர் லாரியில் இருந்த டிரைவரை கொலை செய்து விடுவதாக மிரட்டி நடுவழியில் கீழே தள்ளி விட்டு இரும்பு கம்பிகளுடன் லாரியை ஓட்டி சென்றனர். இதனால் பாதிக்கப்பட்ட டிரைவர் சம்பவம் குறித்து விரார் போலீசில் புகார் அளித்தார்.

4 பேர் கைது

இந்த புகாரின் படி போலீசார் நடத்திய விசாரணையில் லாரியில் இருந்து 27 டன் எடையுள்ள இரும்பு கம்பிகள் மற்றும் 370 கிலோ செம்பு கம்பிகளை கும்பல் திருடி சென்றது தெரியவந்தது. போலீசார் துரித விசாரணை நடத்தி லாரியை கடத்தி சென்ற கும்பலின் அடையாளம் தெரியவந்தது. இதனை தொடர்ந்து பிவண்டி நிஜாம்புரா பகுதியில் பதுங்கி இருந்த கும்பலை சேர்ந்த 4 பேரை பிடித்து கைது செய்தனர். இதில் நவுசாத் அகமது (வயது24), முகமது சமீர் முகமது (21), மெக்தாப் ஆலம் (29), முகமது டேனிஷ் (20) ஆகிய 4 பேரை கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 2 துப்பாக்கிகள், தோட்டாக்கள் மற்றும் கார் இருந்ததை பறிமுதல் செய்தனர். திருடப்பட்ட ரூ.42 லட்சம் மதிப்புள்ள பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.


Next Story