மனைவியுடன் ஏற்பட்ட தகராறில் தூக்குப்போட்டு தற்கொலைக்கு முயன்ற வாலிபர்
மனைவியுடன் ஏற்பட்ட தகராறில் தூக்குப்போட்டு தற்கொலைக்கு முயன்ற வாலிபர் போலீஸ்காரரின் முயற்சியால் உயிர் பிழைத்தார்.
மும்பை,
மனைவியுடன் ஏற்பட்ட தகராறில் தூக்குப்போட்டு தற்கொலைக்கு முயன்ற வாலிபர் போலீஸ்காரரின் முயற்சியால் உயிர் பிழைத்தார்.
வாக்குவாதம்
மும்பை விக்ரோலி பகுதியை சேர்ந்தவர் தீபக் லாகனே. போலீஸ்காரரான இவர், சக போலீசார் 2 பேருடன் நேற்று அதிகாலை 2 மணி அளவில் அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டார். அப்போது குடிசை வீட்டில் இருந்து தம்பதி இடையே ஏற்பட்ட வாக்குவாதம் காரணமாக பலத்த சத்தம் போட்டனர். இந்த சத்தம் போலீசாருக்கு கேட்டது.
இதனால் போலீஸ்காரர் தீபக் லாகேனே குடிசை வீட்டின் அருகே சென்று 30 வயது வாலிபரின் நடவடிக்கையை கவனித்தார். அப்போது அந்த வாலிபர் மனைவியின் சேலையால் தூக்குப்போட்டு தற்கொலைக்கு முயன்றார். இதனைக்கண்ட அவர் உடனடியாக விரைந்து சென்று சேலையை கத்தியால் துண்டித்தார்.
உயிர் பிழைத்தார்
கீழே விழுந்த வாலிபருக்கு மார்பை அழுத்தி முதலுதவி சிகிச்சை வழங்கினார். பின்னர் போலீசாரின் உதவியுடன் அருகில் உள்ள ராஜவாடி ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு டாக்டர் வழங்கிய சிகிச்சையின் பேரில் அவர் உயிர் பிழைத்தார்.
மனைவியுடன் ஏற்பட்ட தகராறில் அவர் தற்கொலைக்கு முயன்றது தெரியவந்தது. போலீஸ்காரர் தீபக் லாகானேவின் துரித நடவடிக்கையால் உயிர் பிழைத்ததாகவும், 5 நிமிடங்கள் தாமதமாக வந்தால் உயிரிழக்க வாய்ப்பு இருப்பதாக அவர் தெரிவித்தார்.
இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.