நூதன முறையில் வயதானவர்கள் 28 பேரிடம் நகை அபேஸ் செய்தவர் கைது
போரிவிலியில் நூதன முறையில் வயதானவர்கள் 28 பேரிடம் இருந்து நகைகளை திருடியவர் கைது செய்யப்பட்டார்.
மும்பை,
மும்பை போரிவிலியில் கடந்த மாதம் 23-ந் தேதி 62 வயது முதியவரை 2 பேர் அணுகினர். சிறிது தொலைவில் திருட்டு சம்பவம் நடந்ததாகவும், அங்கு போலீசார் விசாரணை நடத்தி வருவதால் நகைகளை கழற்றி பத்திரமாக வைத்து கொள்ளும்படியும் தெரிவித்தனர். இதனை நம்பிய முதியவர் ரூ.75 ஆயிரம் மதிப்புள்ள நகைகளை கழற்றிய போது அதனை வாங்கி காகிதத்தில் பொதிந்து தருவதாக கூறி வாங்கினர். பின்னர் பொட்டலத்தை முதியவரிடம் கொடுத்து விட்டு 2 பேர் தப்பி சென்றனர். வீட்டிற்கு சென்று பொட்டலத்தை பிரித்து பார்த்த போது நகைகள் காணாமல் போய் இருந்தது தெரியவந்தது. இது பற்றி போலீசில் முதியவர் புகார் அளித்தார். இந்த புகாரின் படி போலீசார் வழக்கு பதிவு செய்து கண்காணிப்பு கேமராவில் ஆய்வு செய்து விசாரித்தனர். இதில் 2 பேரின் அடையாளம் தெரியவந்தது. இதனை தொடர்ந்து போலீசார் மாகிமில் பதுங்கி இருந்த மங்கடே என்பவரை பிடித்து கைது செய்தனர். அவரது கூட்டாளியான விஜய் தாம்பே என்பவரை பிடிக்க விசாரணை நடத்தி வருகின்றனர். இவர் மும்பை உள்பட புறநகர் பகுதிகளில் வயதானவர்களை குறிவைத்து 28 பேரிடம் ஏமாற்றி நகைகளை பறித்து சென்றது போலீஸ் விசாரணையில் தெரியவந்தது.