தானேயில் முதல் மந்திரி ஏக்நாத் ஷிண்டேவின் வீட்டின் முன்பு தீக்குளிக்க முயன்ற ஆட்டோ டிரைவரால் பரபரப்பு - காரணம் குறித்து போலீஸ் விசாரணை

தானேயில் முதல் மந்திரி ஏக்நாத் ஷிண்டேவின் வீட்டின் முன்பு தீக்குளிக்க முயன்ற ஆட்டோ டிரைவரால் பரபரப்பு ஏற்பட்டது. இதற்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தானே,
தானேயில் முதல் மந்திரி ஏக்நாத் ஷிண்டேவின் வீட்டின் முன்பு தீக்குளிக்க முயன்ற ஆட்டோ டிரைவரால் பரபரப்பு ஏற்பட்டது. இதற்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தீக்குளிக்க முயற்சி
தானே கோப்ரி பாஞ்ச்பாகாடி பகுதியை சேர்ந்தவர் வினய் பாண்டே (வயது42) ஆட்டோ டிரைவரான இவர் சிவசேனா கட்சி தொண்டராகவும் இருந்து வருகிறார். நேற்று காலை தானேயில் உள்ள மாநில முதல் மந்திரி ஏக்நாத் ஷிண்டேவின் வீட்டின் அருகே வந்திருந்தார். அப்போது தான் கொண்டு வந்திருந்த மண்எண்ணெயை தனது உடலில் ஊற்றி தீ வைத்து கொள்ள முயன்றார். அப்போது ஷிண்டே வீட்டின் அருகே பாதுகாப்பு பணிக்காக நிறுத்தப்பட்டு இருந்த சி.ஆர்.பி.எப் வீரர்கள் இதனை கண்டு உடனடியாக அவரை பிடித்து தடுத்து நிறுத்தினர்.
போலீசார் விசாரணை
தகவல் அறிந்த போலீசார் தீக்குளித்து தற்கொலைக்கு முயன்ற வினய் பாண்டேவை கைது செய்து போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்றனர். இது குறித்து போலீசார் அவர் மீது வழக்கு பதிவு செய்து இதற்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். ஷிண்டே வீட்டின் வெளியே நடந்த வீடியோ காட்சிகள் சமூக வலைதளத்தில் வைரலாக பரவி வருகிறது. இந்த சம்பவத்தினால் தானேயில் முதல் மந்திரி வீட்டின் முன்பு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளதால் அங்கு பரபரப்பு நிலவி வருகிறது.






