கல்லூரி மாணவியை கடத்தி ரூ.1 லட்சத்துக்கு விற்ற அவலம்

கல்லூரி மாணவியை கடத்தி ரூ.1 லட்சத்துக்கு விற்ற சம்பவத்தில் பெண் உள்பட 4 பேரை போலீசார் கைது செய்து உள்ளனர்.
மும்பை,
கல்லூரி மாணவியை கடத்தி ரூ.1 லட்சத்துக்கு விற்ற சம்பவத்தில் பெண் உள்பட 4 பேரை போலீசார் கைது செய்து உள்ளனர்.
மாணவி கடத்தல்
மும்பை விக்ரோலி பகுதியை சேர்ந்த 17 வயது கல்லூரி மாணவி கடந்த மாதம் 23-ந் தேதி கல்லூரிக்கு சென்றார். பின்னர் அவர்கள் திரும்பி வரவில்லை. கல்லூரி மாணவி மாயமானது குறித்து பெற்றோர் போலீசில் புகார் அளித்தனர். போலீசார் கடத்தல் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
கண்காணிப்பு கேமரா காட்சிகள் மூலம் மாணவியை ஒரு ஆண், பெண் ரெயிலில் தாதரில் இருந்து மிரஜ் பகுதிக்கு அழைத்து சென்றதை போலீசாா் கண்டுபிடித்தனர்.
50 வயது நபருக்கு விற்பனை
கண்காணிப்பு கேமரா காட்சி மூலம் போலீசார் மாணவியை கடத்திய செம்பூர் பகுதியை சேர்ந்த சுனிதா, அவரது உறவினர் லட்டப்பா ஆகியோரை பிடித்தனர். அவர்களிடம் நடத்திய விசாரணையில் அவர்கள் அவுரங்காபாத்தை சேர்ந்த பாவரான் மாலி என்பவர் மூலமாக கன்பத் காம்ளே என்ற 50 வயது நபருக்கு திருமணத்துக்காக மாணவியை ரூ.1 லட்சத்துக்கு விற்றது தெரியவந்தது.
இதையடுத்து அவுரங்காபாத் சென்ற போலீசார் மாணவியை மீட்டனர். போலீசார் மாணவியை ரூ.1 லட்சத்துக்கு வாங்கி திருமணம் செய்த கன்பத் காம்ளே, இடைத்தரகர் பாவரான் மாலி, செம்பூரை சேர்ந்த சுனிதா, லட்டப்பாவை கைது செய்தனர். போலீசார் அவர்கள் மீது போக்சோ பிரிவின் கீழும் வழக்குப்பதிவு செய்து உள்ளனர்.






