மராட்டியத்தில் பிளாஸ்டிக் பூச்சு, லேமினேசன் பொருட்களுக்கு தடை

மராட்டியத்தில் பிளாஸ்டிக் பூச்சு, லேமினேசன் செய்யப்பட்ட பொருட்களுக்கு தடை விதிக்கப்பட்டு உள்ளது.
மும்பை,
மராட்டியத்தில் பிளாஸ்டிக் பூச்சு, லேமினேசன் செய்யப்பட்ட பொருட்களுக்கு தடை விதிக்கப்பட்டு உள்ளது.
தடை
மராட்டியத்தில் கடந்த 2018-ம் ஆண்டு ஒருமுறை மட்டுமே பயன்படுத்த கூடிய பிளாஸ்டிக் பைகள் போன்ற பொருட்களுக்கு தடை விதிக்கப்பட்டது. இந்த நிலையில் தற்போது பிளாஸ்டிக் பூச்சு, லேமினேசன் செய்து ஒருமுறை பயன்படுத்தக்கூடிய பொருட்களுக்கு தடை விதிக்கப்பட்டு உள்ளது. இதுபோன்ற தட்டுகள், கோப்பைகள் போன்றவை குப்பையாக அதிகளவில் சேருவதை கருத்தில் கொண்டு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.
முதல்-மந்திரி ஏக்நாத் ஷிண்டே தலைமையில் நேற்று நடந்த கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டது.
புதிய விதி
ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்களுக்கு மத்திய அரசு விதித்துள்ள தடையை அமல்படுத்துவதற்காக அமைக்கப்பட்ட அதிகாரமளிக்கப்பட்ட குழுவின் பரிந்துரையை ஏற்று அரசு இந்த முடிவை எடுத்துள்ளது.
இத்தகைய தயாரிப்புகள் குறித்த தெளிவின்மையை நீக்க புதிய விதி அறிமுகப்படுத்தப்படும் என அரசு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.






