அடிக்கடி தீ விபத்து- 400 சி.என்.ஜி. பஸ்களை பெஸ்ட் நிர்வாகம் திரும்ப பெற்றது

அடிக்கடி தீ விபத்துகளில் சிக்குவதால் 400 சி.என்.ஜி. பஸ்களை பெஸ்ட் நிர்வாகம் திரும்ப பெற்று உள்ளது.
மும்பை,
அடிக்கடி தீ விபத்துகளில் சிக்குவதால் 400 சி.என்.ஜி. பஸ்களை பெஸ்ட் நிர்வாகம் திரும்ப பெற்று உள்ளது.
400 சி.என்.ஜி. பஸ்கள்
மும்பையில் மாநகராட்சியின் பெஸ்ட் நிர்வாகம் சார்பில் மாநகர பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன. நேற்று முன்தினம் இரவு அந்தேரி ரெயில் நிலையம் அருகே பெஸ்ட் பஸ் ஒன்று திடீரென தீப்பிடித்து எரிந்தது. அதிர்ஷ்டவசமாக பஸ்சில் இருந்து பயணிகள் வேகமாக கீழே இறங்கி உயிர் தப்பினர்.
மும்பையில் கடந்த ஒரு மாதத்தில் மட்டும் 3 பெஸ்ட் பஸ்கள் தீப்பிடித்து உள்ளன. இந்த சம்பவத்தை அடுத்து பெஸ்ட் நிர்வாகம் 400 சி.என்.ஜி. பஸ்களை திரும்ப பெற்று உள்ளது.
பாதுகாப்பு முக்கியம்
இதுதொடர்பாக பெஸ்ட் பொது மேலாளர் லோகேஷ் சந்திரா கூறுகையில், "மாதேஷ்வரி நிறுவனத்தால் இயக்கப்பட்டு வரும் டாடா சி.என்.ஜி. பஸ்கள் தொடர்ந்து தீ விபத்துகளில் சிக்குவதை அடுத்து, அந்த நிறுவனத்தின் 400 பஸ்களை திரும்ப பெற்று உள்ளோம்.
விபத்துகளை தடுக்க அந்த நிறுவனத்தினர் உரிய நடவடிக்கை எடுத்த பிறகு தான் அந்த பஸ்கள் இயக்கப்படும். எங்களுக்கு பயணிகளின் பாதுகாப்பு தான் முக்கியம்" என்றார்.






