அரசியல்வாதிகள் இடம்பெற்றதாக புகார்: ஷீரடி சாய்பாபா கோவில் அறக்கட்டளை நிர்வாக குழு நியமனம் ரத்து- ஐகோர்ட்டு உத்தரவு


அரசியல்வாதிகள் இடம்பெற்றதாக புகார்: ஷீரடி சாய்பாபா கோவில் அறக்கட்டளை நிர்வாக குழு நியமனம் ரத்து- ஐகோர்ட்டு உத்தரவு
x

ஷீரடி சாய்பாபா கோவில் அறக்கட்டளை நிர்வாக குழு நியமனத்தை ரத்து செய்து ஐகோர்ட்டு உத்தரவிட்டது.

மும்பை,

ஷீரடி சாய்பாபா கோவில் அறக்கட்டளை நிர்வாக குழு நியமனத்தை ரத்து செய்து ஐகோர்ட்டு உத்தரவிட்டது.

பொதுநலன் வழக்கு

அகமது நகர் அருகே உள்ள உலக பிரசித்தி பெற்ற ஷீரடி சாய்பாபா கோவிலுக்கு பல்லாயிரக்கணக்கான மக்கள் வந்து சாய்பாபாவை தரிசனம் செய்து செல்கின்றனர்.

இந்த கோவில் அறக்கட்டளை நிர்வாக குழு உறுப்பினர்களை மராட்டிய அரசு கடந்த 2021-ம் ஆண்டு நியமித்தது. ஆனால் இதை எதிர்த்து உத்தம்ராவ் ஷெல்கே என்பவர் மும்பை ஐகோர்ட்டின் அவுரங்காபாத் கிளையில் பொதுநலன் வழக்கு தொடர்ந்தார்.

இதில் எந்த ஒரு வெளிப்படையான நடைமுறையும் பின்பற்றப்படாமல், சாய்பாபா கோவில் அறக்கட்டளையின் சட்டத்தை மீறி அரசியல் பிரமுகர்கள் குழுவில் நியமிக்கப்பட்டு உள்ளனர் என அவர் மனுவில் கூறியிருந்தார்.

நியமனம் ரத்து

மனு மீதான விசாரணை நீதிபதிகள் ஆர்.டி. தனுகா மற்றும் எஸ்.ஜி. மெகரே ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.

அப்போது இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள் ஸ்ரீ சாய்பாபா ஷீரடி சன்ஸ்தான் அறக்கட்டளையின் நிர்வாக குழுவை நியமித்து 2021-ம் ஆண்டு அரசு வெளியிட்ட உத்தரவை ரத்து செய்தனர்.

இது குறித்து நீதிபதிகள், "சாய்பாபா கோவிலுக்கு வரும் பக்தர்களின் நலன்களை பாதுகாப்பதற்காக இந்த அறக்கட்டளை உருவாக்கப்பட்டது. அரசின் தனிப்பட்ட நலன், அவர்களின் கட்சி தொண்டர்கள் அல்லது அரசியல்வாதிகளுக்கு இடம் அளிப்பதற்காக இல்லை. அடுத்த 8 வார காலத்திற்குள் புதிய நிர்வாக குழுவை அமைக்க மாநில அரசுக்கு உத்தரவிடுகிறோம். புதிய குழு அமைக்கப்படும் வரை அறக்கட்டளையின் விவகாரங்கள் அகமதுநகர் மாவட்ட முதன்மை மாவட்ட நீதிபதி தலைமையிலான தற்காலிக குழுவால் நிர்வகிக்கப்படும்" என்று தங்களது உத்தரவில் தெரிவித்தனர்.



Next Story