துலேயில் இரு பிரிவினர் இடையே மோதல்; கல்வீச்சில் 12 போலீசார் காயம்


துலேயில் இரு பிரிவினர் இடையே மோதல்; கல்வீச்சில் 12 போலீசார் காயம்
x
தினத்தந்தி 11 Aug 2023 8:00 PM GMT (Updated: 12 Aug 2023 10:29 AM GMT)

துலேயில் இரு பிரிவினர் இடையே ஏற்பட்ட மோதலில் 12 போலீசார் காயம் அடைந்தனர்.

மும்பை,

துலேயில் இரு பிரிவினர் இடையே ஏற்பட்ட மோதலில் 12 போலீசார் காயம் அடைந்தனர்.

திடீர் மோதல்

துலே மாவட்டம் சிர்பூர் தாலுகா சாங்வி கிராமத்தில் இரு பிரிவினர் இடையே நேற்று முன்தினம் இரவு திடீர் மோதல் ஏறபட்டது. இதையடுத்து ஒரு பிரிவினர் மும்பை -ஆக்ரா நெடுஞ்சாலையில் அமர்ந்து மறியல் போராட்டம் நடத்தினர். இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தகவல் அறிந்த போலீசார் விரைந்து வந்தனர். ஆனால் அங்கு பதற்றம் அதிகமானதால் கூடுதல் போலீசார் வரவழைக்கப்பட்டனர்.

12 போலீசார் காயம்

இந்த நிலையில் போராட்டக்காரர்கள் திடீரென போலீசார் மீது கல்வீசி தாக்கினர். மேலும் நெடுஞ்சாலை போலீசின் 2 வாகனங்களை அடித்து நொறுக்கினர். இதையடுத்து போலீசார் வன்முறை கும்பலை விரட்டியடித்தனர். இதனால் அந்த பகுதி போர்க்களம் போல மாறியது. இந்த சம்பவத்தில் 12 போலீசார் காயம் அடைந்ததாக போலீஸ் அதிகாரி ஒருவர் கூறினார். மேலும் நெடுஞ்சாலை போலீஸ் வாகனங்களை தாக்கியதில் அதில் இருந்த பொருட்கள், ஆவணங்கள் மாயமானதாகவும் அவர் தெரிவித்தார். இந்த சம்பவம் தொடர்பாக சாங்வி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story