புதிய சட்டசபை கட்ட பரிசீலனை - சபாநாயகர் ராகுல் நர்வேகர் பேட்டி

புதிய சட்டசபை கட்ட பரிசீலனை செய்யப்பட்டு வருவதாக சபாநாயகர் ராகுல் நர்வேகர் கூறினார்.
மும்பை,
புதிய சட்டசபை கட்ட பரிசீலனை செய்யப்பட்டு வருவதாக சபாநாயகர் ராகுல் நர்வேகர் கூறினார். புதிய நாடாளுமன்ற கட்டிடத்தை கடந்த மே மாதம் பிரதமர் நரேந்திர மோடி திறந்துவைத்தார். இந்தநிலையில் மராட்டிய சபாநாயகர் ராகுல் நர்வேகர் நேற்று மும்பையில் நிருபர்களிடம் கூறியதாவது:-
வாக்காளர் அதிகரிப்பு
நாடாளுமன்ற மக்களவை மற்றும் மாநிலங்களவைக்கு புதிய கட்டிடம் திறந்து வைக்கப்பட்டு உள்ளது. இதில் கூடுதல் உறுப்பினர்கள் அமர தேவையான வசதிகள் செய்யப்பட்டு உள்ளது. இதேபோன்று மராட்டிய சட்டமன்றம் மற்றும் மேல்-சபைக்கு புதிய சட்டமன்ற கட்டிடம் வேண்டும் என்று விரும்புகிறேன். வாக்காளர்களின் எண்ணிக்கை அதிகரிப்புக்கு ஏற்ப எம்.எல்.ஏ.க்கள் மற்றும் எம்.எல்.சி.க்களின் எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்பு உள்ளது.
புதிய கட்டிடம்
அப்படி நடக்கும் பட்சத்தில் தற்போதைய சட்டமன்ற கட்டிடத்தில் கூடுதல் உறுப்பினர்களுக்கான இருக்கை வசதி இல்லை. எனவே மராட்டியத்திற்கான புதிய சட்டமன்ற மற்றும் மேல்-சபை கட்டிடத்தை கட்டுவதற்கான திட்டம் பரிசீலனையில் உள்ளது. புதிய தேவைகளுக்கு ஏற்றவாறு முற்றிலும் புதிய சட்டமன்ற வளாகத்தை நாங்கள் கட்ட திட்டமிட்டுள்ளோம். இந்த திட்டத்தை முன்னோக்கி கொண்டுசெல்ல போதுமான நிதி கிடைக்கும் என்று நான் நம்புகிறேன். இவ்வாறு அவர் கூறினார்.