நடிகையின் தாய் மீது சைக்கிளை மோதிய சிறுவன் மீது வழக்குப்பதிவு செய்த விவகாரத்தில் மாநில அரசுக்கு அபராதம்- ஐகோர்ட்டு உத்தரவு

நடிகையின் தாய் மீது சைக்கிளை மோதிய சிறுவன் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்ட விவகாரத்தில் மாநில அரசுக்கு மும்பை ஐகோர்ட்டு அபராதம் விதித்து உள்ளது.
மும்பை,
நடிகையின் தாய் மீது சைக்கிளை மோதிய சிறுவன் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்ட விவகாரத்தில் மாநில அரசுக்கு மும்பை ஐகோர்ட்டு அபராதம் விதித்து உள்ளது.
சிறுவன் மீது வழக்கு
மும்பை மேற்கு புறநகா் பகுதியில் 9 வயது சிறுவன் பெற்றோருடன் அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வருகிறான். சிறுவன் கடந்த மார்ச் மாதம் அவன் வசித்துவரும் அடுக்குமாடி குடியிருப்பு பகுதியில் சைக்கிள் ஓட்டிக்கொண்டு இருந்தான். அப்போது எதிர்பாராதவிதமாக சைக்கிள் மோதி நடிகை ஒருவரின் தாய் காயமடைந்தார். இந்த சம்பவம் தொடர்பாக நடிகை அளித்த புகாரின் பேரில் போலீசார் 9 வயது சிறுவன் மீது வழக்குப்பதிவு செய்தனர். இந்த சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியது.
இந்தநிலையில் சிறுவன் மீது பதியப்பட்ட வழக்கை ரத்து செய்ய கோரி அவனது பெற்றோர் மும்பை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தனர். இந்த மனு மீதான விசாரணை நீதிபதிகள் ரேவதி மோகிதே, எஸ்.எம். மோதக் ஆகியோர் அடங்கிய அமர்வு முன் நடந்தது.
மாநில அரசுக்கு அபராதம்
அப்போது நீதிபதிகள் போலீசார் 9 வயது சிறுவன் மீது வழக்குப்பதிவு செய்ததற்கு கடும் கண்டனம் தெரிவித்தனர். போலீசார் புத்தியை பயன்படுத்தாமல் வழக்குப்பதிவு செய்ததாக கூறினர். இதையடுத்து சிறுவன் மீது பதியப்பட்ட வழக்கை ரத்து செய்த ஐகோர்ட்டு, இந்த விவகாரத்தில் மாநில அரசுக்கு ரூ.25 ஆயிரம் அபராதம் விதித்தது. மேலும் இந்த தொகையை தவறு செய்த போலீசாரிடம் இருந்து வசூல் செய்து சிறுவனின் தாயிடம் இழப்பீடாக வழங்கவும் ஐகோர்ட்டு உத்தரவிட்டது.
முன்னதாக இந்த வழக்கை முடித்து வைக்க தயாராக இருப்பதாக போலீஸ் தரப்பில் ஐகோர்ட்டில் கூறப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது. மேலும் சிறுவன் மீது வழக்குப்பதிவு செய்தற்காக போலீசார் ஐகோர்ட்டில் நிபந்தனையற்ற மன்னிப்பும் கேட்டு இருந்தனர்.






