ஜிதேந்திர அவாத் மீது மானபங்க வழக்கு: அஜித் பவார் கண்டனம்

ஜிதேந்திர அவாத் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டதற்கு அஜித்பவார் கண்டனம் தெரிவித்து உள்ளார்.
மும்பை,
ஜிதேந்திர அவாத் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டதற்கு அஜித்பவார் கண்டனம் தெரிவித்து உள்ளார்.
அஜித்பவார் கண்டனம்
தேசியவாத காங்கிரஸ் முன்னாள் மந்திரி ஜிதேந்திர அவாத், வழியில் நின்ற பெண் ஒருவரை தள்ளி நிற்குமாறு கூறி தள்ளியதற்காக போலீசார் அவர் மீது மானபங்க வழக்குப்பதிவு செய்து உள்ளனர். இதற்கு தேசியவாத காங்கிரசை சேர்ந்த முன்னாள் துணை முதல்-மந்திரி அஜித்பவார் கண்டனம் தெரிவித்து உள்ளார்.
இதுதொடர்பாக அவர் கூறியதாவது:-
இந்த வழக்கு தவறான முறையில் பதிவு செய்யப்பட்டு உள்ளது. போலீஸ் துறையை தவறாக பயன்படுத்தி அவர் மீது 2 வழக்குப்பதிவு செய்யப்பட்டதால், எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்யப்போவதாக ஜிதேந்திர அவாத் கூறியுள்ளார். அவர் அப்படி எந்த முடிவையும் எடுக்க கூடாது என கேட்டு கொள்கிறேன். ஹர் ஹர் மகாதேவ் காட்சி தொடர்பான பிரச்சினையில் தாக்கப்பட்ட நபரே, ஜிதேந்திர அவாத் தன்னை பாதுகாத்ததாக கூறினார். ஆனாலும் ஜிதேந்திர அவாத் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
கோழைத்தனமான செயல்
2-வது சம்பவத்தில் முதல்-மந்திரி ஏக்நாத் ஷிண்டேவும் அங்கு இருக்கிறார். வீடியோவில் ஜிதேந்திர அவாத் கூட்டத்தில் வழிவிடுங்கள் என கூறிகொண்டே செல்வதை பார்க்க முடியும். அவர் பெண்ணையும் ஓரமாக நிற்க வைக்கதான் முயற்சி செய்தார். வேறு எதுவும் நடக்கவில்லை. சம்பவம் நடந்த இடத்தில் இருந்து முதல்-மந்திரி 10 மீட்டர் தூரத்தில் தான் இருந்த நிலையிலும், வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
முதல்-மந்திரி அவராகவே முன்வந்து அந்த இடத்தில் எதுவும் நடக்கவில்லை என்பதை கூறவேண்டும். அவர் எப்படி முதல்-மந்திரியானார் என்பதை தாண்டி, அவர் 13 கோடி மக்களின் பிரதிநிதி. ஜிதேந்திர அவாத் மீது மானபங்க வழக்கு பதிவு செய்து இருக்க வேண்டாம் என பலர் கருத்து கூறியுள்ளனர். இது மக்கள் பிரதிநிதிகளை பிரச்சினைக்குள் தள்ளும் முயற்சி. இது கோழைத்தனமான செயல். தேவையின்றி மக்கள் பிரதிநிதிகளின் பெயரை கெடுக்க கூடாது.
இவ்வாறு அவர் கூறினார்.






