விலை அதிகம் என்று கருதினால் 4 மாதங்கள் வெங்காயம் சாப்பிட வேண்டாம்; மந்திரி ததா புசே சர்ச்சை கருத்து


விலை அதிகம் என்று கருதினால் 4 மாதங்கள் வெங்காயம் சாப்பிட வேண்டாம்; மந்திரி ததா புசே சர்ச்சை கருத்து
x
தினத்தந்தி 22 Aug 2023 6:45 PM GMT (Updated: 22 Aug 2023 6:46 PM GMT)

விலை அதிகமாக இருப்பதாக கருதினால் 4 மாதங்கள் வெங்காயம் சாப்பிட வேண்டாம் என்றும், இதனால் எந்த மாற்றமும் ஏற்படபோவதில்லை என்றும் மந்திரி ததா புசே கூறினார்.

மும்பை,

விலை அதிகமாக இருப்பதாக கருதினால் 4 மாதங்கள் வெங்காயம் சாப்பிட வேண்டாம் என்றும், இதனால் எந்த மாற்றமும் ஏற்படபோவதில்லை என்றும் மந்திரி ததா புசே கூறினார்.

வெங்காய விலை உயர்வு

வெங்காயம் விலை உயர்வை கட்டுப்படுத்தும் வகையில் வருகிற டிசம்பர் மாதம் வரை வெங்காய ஏற்றுமதிக்கு மத்திய அரசு 40 சதவீதம் வரி விதித்து உள்ளது. இதை கண்டித்து நாசிக் மாவட்டத்தில் உள்ள மொத்த மார்க்கெட்டுகளில் வெங்காய ஏலத்தை வியாபாரிகள் நிறுத்தி வைத்து உள்ளனர். இதில் இந்தியாவில் மிகப்பெரிய லசல்காவ் வெங்காய சந்தையும் அடங்கும். மேலும் நாசிக்கில் நேற்று முன்தினம் விவசாயிகள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்தநிலையில் சிவசேனா கட்சியை சேர்ந்த பொதுப்பணித்துறை மந்திரியும், நாசிக் மாவட்ட பொறுப்பு மந்திரியுமான ததா புசேயிடம் வெங்காய விலை உயர்வு விவகாரம் குறித்து நிருபர்கள் கேள்வி எழுப்பினர். அப்போது விவசாயிகளுக்கு ஆதரவாக பேசுவதாக நினைத்து அவர் சர்ச்சை கருத்தை கூறியுள்ளார். இது குறித்து அவர் கூறியதாவது:-

சாப்பிடுவதை நிறுத்திவிடுங்கள்

ரூ.20-25 கொடுத்து ஒருவரால் வெங்காயத்தை வாங்க முடியவில்லை எனில், அவர் சில மாதங்களுக்கு வெங்காயம் சாப்பிடுவதை நிறுத்திவிட வேண்டும். விலை உயரும் நேரத்தில் தான் விவசாயிகளுக்கு சிறிது பணம் கிடைக்கும். அதற்கு மக்களும் தயாராக இருந்து இருக்க வேண்டும். விலை குறையும் போது விவசாயிகளுக்கு அநீதி இழைக்கப்படாத வகையில் அரசு பார்த்து கொள்ளும். வெங்காயத்தை நீண்ட நாட்களுக்கு வைக்க முடியாது. 2-4 மாதங்கள் வெங்காயம் சாப்பிடாமல் இருப்பதால் எந்த மாற்றமும் நடந்து விடப்போவதில்லை. இவ்வாறு அவர் கூறினார். மந்திரியின் சர்ச்சை கருத்துக்கு எதிர்க்கட்சியினர் விமர்சனம் செய்து உள்ளனர்.


Next Story