தொடர் மழை காரணமாக குடிநீர் வழங்கும் ஏரிகளில் நீர் மட்டம் உயர்வு


தொடர் மழை காரணமாக குடிநீர் வழங்கும் ஏரிகளில் நீர் மட்டம் உயர்வு
x
தினத்தந்தி 2 July 2023 8:15 PM GMT (Updated: 2 July 2023 8:15 PM GMT)

மும்பையில் பெய்து வரும் மழையால் குடிநீர் வழங்கும் ஏரிகளில் நீர்மட்டம் உயர்ந்துள்ளது.

மும்பை,

மும்பையில் பெய்து வரும் மழையால் குடிநீர் வழங்கும் ஏரிகளில் நீர்மட்டம் உயர்ந்துள்ளது.

நீர் மட்டம் உயர்வு

மும்பையில் கடந்த சில தினங்களாக பருவமழை தீவிரம் அடைந்துள்ளது. தொடர்மழையால் மும்பையில் அநேக இடங்களில் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. இந்த நிலையில் நேற்று ஆங்காங்கே லேசான மழை பெய்தது. பெரிய அளவில் எங்கும் மழை பதிவாகவில்லை. நேற்று காலை 8.30 மணி வரையுடன் முடிந்த 24 மணி நேரத்தில் கொலாபாவில் 1.4 செ.மீ மழையும், புறநகர் சாந்தாகுருசில் 2.2 செ.மீ மழையும் பதிவாகி உள்ளது.

ஜல்காவில் வறண்ட வானிலை

இருப்பினும் நீர் பிடிப்பு பகுதியில் பெய்த கனமழை காரணமாக மும்பைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளில் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. கடந்த வாரம் தொடக்கத்தில் வெறும் 7 சதவீதமே இருந்த ஏரிகளின் தண்ணீர் இருப்பு பலத்த மழை காரணமாக படிப்படியாக உயர்ந்து 15.40 சதவீதமாக அதிகரித்துள்ளது. கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் 11.78 சதவீதமாக தண்ணீர் இருந்தது குறிப்பிடத்தக்கது. மராட்டியத்தை பொறுத்தவரை வடக்கு மராட்டிய பகுதிகளான நாசிக் மற்றும் நந்துர்பர் மாவட்டத்தில் பலத்த மழை பெய்து உள்ளது. ஆனால் ஜல்காவில் வறண்ட வானிலையே காணப்பட்டது. வறட்சியால் பாதிக்கப்பட்ட மரத்வாடா பகுதியில் கடந்த 2 நாட்களாக பலத்த மழை வெளுத்து வாங்கியது. பருவமழை தாமதமாக தொடங்கியதால் 2 வாரத்திற்கு மேலாக விதைப்பு பணிகள் நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளதாக விவசாயிகள் தெரிவித்தனர்.


Next Story