குற்றம்சாட்டப்பட்டவரின் ஒப்புதல் இன்றி உண்மை கண்டறியும் சோதனை நடத்தக்கூடாது; ஆர்.பி.எப். வீரர் வழக்கில் கோர்ட்டு உத்தரவு


குற்றம்சாட்டப்பட்டவரின் ஒப்புதல் இன்றி உண்மை கண்டறியும் சோதனை நடத்தக்கூடாது; ஆர்.பி.எப். வீரர் வழக்கில் கோர்ட்டு உத்தரவு
x
தினத்தந்தி 26 Aug 2023 1:15 AM IST (Updated: 26 Aug 2023 1:15 AM IST)
t-max-icont-min-icon

அடிப்படை உரிமையை காக்கவேண்டும் என்பதால் குற்றம்சாட்டப்பட்டவரின் ஒப்புதல் இன்றி உண்மை கண்டறியும் சோதனை நடத்தப்படகூடாது என்று ஆர்.பி.எப். வீரர் சேத்தன் சிங் வழக்கில் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

மும்பை,

அடிப்படை உரிமையை காக்கவேண்டும் என்பதால் குற்றம்சாட்டப்பட்டவரின் ஒப்புதல் இன்றி உண்மை கண்டறியும் சோதனை நடத்தப்படகூடாது என்று ஆர்.பி.எப். வீரர் சேத்தன் சிங் வழக்கில் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

ஆர்.பி.எப். வீரர் வெறிச்செயல்

ஜெய்ப்பூரில் இருந்து மும்பைக்கு கடந்த 31-ந் தேதி வந்த எக்ஸ்பிரஸ் ரெயிலில் பாதுகாப்பு பணியில் இருந்த சேத்தன் சிங்(வயது34) என்ற ஆர்.பி.எப். வீரர் அவரது உயர் அதிகாரி மற்றும் 3 அப்பாவி பயணிகளை துப்பாக்கியால் சுட்டுக்கொலை செய்தார். ஓடும் ரெயிலில் ஆர்.பி.எப். வீரர் நிகழ்த்திய வெறிச்செயல் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த சம்பவத்தில் கைது செய்யப்பட்ட சேத்தன் சிங்கிற்கு உண்மை கண்டறியும் சோதனை நடத்த வேண்டும் என போலீசார் போரிவிலி மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் முறையிட்டனர். சேத்தன் சிங் தரப்பு வக்கீல்கள் அதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். சேத்தன் சிங்கிற்கு விருப்பம் இல்லாத போது அவருக்கு உண்மை கண்டறியும் சோதனை நடத்துவது அடிப்படை உரிமையை மீறுவது ஆகும் என அவர்கள் கோர்ட்டில் தெரிவித்தனர். இதில் கடந்த 11-ந் தேதி சேத்தன் சிங்கிற்கு உண்மை கண்டறியும் சோதனை நடத்த கோர்ட்டு அனுமதி வழங்க மறுத்து இருந்தது.

அடிப்படை உரிமை

இந்தநிலையில் இதுதொடர்பான விரிவான கோர்ட்டு உத்தரவு தற்போது வெளியாகி உள்ளது. அதில் கூறப்பட்டு இருப்பதாவது:- சீரான விசாரணைக்காக குற்றம்சாட்டப்பட்டவருக்கு கட்டாயமாக உண்மை கண்டறியும் சோதனை நடத்த முடியாது. உண்மை கண்டறியும் சோதனை தொடர்பான சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பை உன்னிப்பாக கவனித்தால், குற்றம்சாட்டப்பட்டவரின் ஒப்புதலுடன் தான் அந்த சோதனையை செய்ய முடியும். குற்றம்சாட்டப்பட்டவரின் ஒப்புதல் இல்லாமல் அவரை உண்மை கண்டறியும் சோதனைக்கு கட்டாயப்படுத்த முடியாது. குற்றம்சாட்டப்பட்டவர் சோதனைக்கு தயாராக இல்லை என்பதால் அவரின் அடிப்படை உரிமை காக்கப்பட வேண்டும். எனவே மனு தள்ளுபடி செய்யப்படுகிறது. அமைதியாக இருப்பது குற்றம்சாட்டப்பட்டவரின் அடிப்படை உரிமை. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

1 More update

Next Story