சொத்து தகராறில் முன்னாள் போலீஸ் அதிகாரி மகன் கடத்தி கொலை- 5 பேர் கைது


சொத்து தகராறில் முன்னாள் போலீஸ் அதிகாரி மகன் கடத்தி கொலை- 5 பேர் கைது
x
தினத்தந்தி 4 May 2023 6:45 PM GMT (Updated: 4 May 2023 6:46 PM GMT)

சொத்து தகராறில் ஓய்வுபெற்ற முன்னாள் போலீஸ் அதிகாரியின் மகனை கடத்தி கொலை செய்த மாமா மகன் உள்பட 5 பேரை போலீசார் கைது செய்தனர்.

மும்பை,

சொத்து தகராறில் ஓய்வுபெற்ற முன்னாள் போலீஸ் அதிகாரியின் மகனை கடத்தி கொலை செய்த மாமா மகன் உள்பட 5 பேரை போலீசார் கைது செய்தனர்.

சொத்து தகராறு

கோலாப்பூரை சோ்ந்தவர் ரோகிணி காம்ளே(வயது80). இவரது கணவர் வசந்த் காம்ளே. இவர் ஓய்வுபெற்ற மும்பை போலீஸ் துணை கமிஷனர். ரோகிணி காம்ளே மகன் விஷாலுடன் (45) வசித்து வந்தார். கடந்த மாதம் அவர், மகனுடன் மாயமானார்.

சம்பவம் குறித்து ரோகிணி காம்ளேவின் சகோதரி செம்பூர் போலீசில் புகார் அளித்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து 2 பேரையும் தேடினர். விஷாலுடன் கடைசியாக போனில் பேசிய 2 பேரை பிடித்து விசாரணை நடத்தினர். அப்போது சொத்து தகராறில் விஷாலை கும்பல் கடத்தி கொலை செய்தது தெரியவந்தது. மேலும் மூதாட்டியை ஆரேகாலனி பகுதியில் பிடித்து வைத்து இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

அஜ்மீருக்கு கடத்தினர்

இதையடுத்து போலீசார் மூதாட்டி ரோகிணியை மீட்டனர். விசாரணையில், ரோகிணிக்கும் அவரது தம்பி பிரதீப் ராம்தேகேவுக்கும் இடையே கோலாப்பூரில் உள்ள நிலம், செம்பூரில் உள்ள பங்களா வீடு தொடர்பாக சொத்து தகராறு இருந்தது. கடந்த மார்ச் மாதம் சொத்து தகராறு தொடர்பான வழக்கு விசாரணைக்காக ரோகிணி, விஷால் மும்பை வந்தனர். அவர்கள் செம்பூரில் உள்ள ஓட்டலில் தங்கி இருந்தனர். அப்போது தான் ரோகிணியின் தம்பி மகன் பிரனாவ் கூலிப்படை மூலம் பன்வெலில் நிலம் காட்டுவது போல ஏமாற்றி ரோகிணி, விஷாலை அழைத்து சென்றனர்.

பின்னர் கூலிப்படை கும்பல் அவர்களை ஆஜ்மீருக்கு கடத்தி சென்றது. அங்கு வைத்து சொத்து பத்திரத்தில் கையெழுத்து போடுமாறு ரோகிணி, விஷாலை மிரட்டினர். ஆனால் அவர்கள் கையெழுத்து போடவில்லை.

நெடுஞ்சாலையில் உடல் வீச்சு

இதனால் ஆத்திரமடைந்த கும்பல் விஷாலை கொலை செய்து ஆமதாபாத் நெடுஞ்சாலை பகுதியில் வீசியது. மேலும் ரோகிணியை ஆரேகாலனியில் உள்ள பங்களாவில் அடைத்து வைத்து பத்திரத்தில் கையெழுத்து போடும்படி மிரட்டி உள்ளது. இந்தநிலையில் தான் போலீசார் மூதாட்டியை மீட்டனர்.

சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார் ரோகிணியின் தம்பி மகன் பிரனாவ், ஜோதி, அவரது கணவர் ரோகித், கூலிப்படையை சேர்ந்த முனீர் அமின் பதான், ராஜூ பாபு ஆகியோரை கைது செய்தனர். மேலும் சைரா கான், இர்பான் சேக் ஆகிய 2 பேரை தேடி வருகின்றனர்.

போலீசார் ஆமதாபாத் நெடுஞ்சாலை பகுதியில் கொலை செய்து வீசப்பட்டதாக கூறப்படும் விஷாலின் உடலையும் தேடிவருகின்றனர்.


Next Story