ஏக்நாத் கட்சேவுக்கு எதிரான மோசடி வழக்கில் விசாரணைக்கு அனுமதி கேட்கும் போலீசார்


ஏக்நாத் கட்சேவுக்கு எதிரான மோசடி வழக்கில் விசாரணைக்கு அனுமதி கேட்கும் போலீசார்
x

முன்னாள் மந்திரி ஏக்நாத் கட்சேவுக்கு எதிரான வழக்கை மீண்டும் விசாரிக்க அனுமதி கேட்டு லஞ்ச ஒழிப்புதுறை போலீசார் கோர்ட்டில் முறையிட்டு உள்ளனர்.

மும்பை,

முன்னாள் மந்திரி ஏக்நாத் கட்சேவுக்கு எதிரான வழக்கை மீண்டும் விசாரிக்க அனுமதி கேட்டு லஞ்ச ஒழிப்புதுறை போலீசார் கோர்ட்டில் முறையிட்டு உள்ளனர்.

முடித்து வைக்கப்பட்ட வழக்கு

பா.ஜனதாவில் பலம்வாய்ந்த தலைவராக இருந்தவர் ஏக்நாத் கட்சே. இவர் கடந்த தேவேந்திர பட்னாவிஸ் ஆட்சியில் வருவாய் துறை மந்திரியாக இருந்தார். அப்போது அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி இவர் புனே, போசரி எம்.ஐ.டி.சி. பகுதியில் 3 ஏக்கர் நிலத்தை வாங்கியதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதையடுத்து ஏக்நாத் கட்சே மந்திரி பதவியை ராஜினாமா செய்தார். மேலும் அவர் மீது லஞ்ச ஒழிப்புதுறை போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

இதன்பிறகு பா.ஜனதாவில் தேவேந்திர பட்னாவிசுக்கும், ஏக்நாத் கட்சேவுக்கும் இடையே பனிப்போர் நிலவி வந்தது. இதற்கிடையே கடந்த 2018-ம் ஆண்டு ஏக்நாத் கட்சேவுக்கு எதிரான மோசடி வழக்கை முடித்து வைக்குமாறு லஞ்ச ஒழிப்புதுறை கோர்ட்டில் அறிக்கை தாக்கல் செய்தது.

மீண்டும் விசாரணை

இந்தநிலையில் கடந்த சட்டசபை தேர்தலுக்கு பிறகு ஏக்நாத் கட்சே தேசியவாத காங்கிரஸ் கட்சிக்கு தாவினார். இதற்கிடையே புனே போசரி இடமோசடி வழக்கை அமலாக்கத்துறை விசாரிக்க தொடங்கியது. இதில் அவர்கள் ஏக்நாத் கட்சேவின் மருமகனை கைது செய்தனர்.

இந்தநிலையில் ஏக்நாத் கட்சேவுக்கு எதிரான வழக்கை மீண்டும் விசாரிக்க அனுமதி கேட்டு லஞ்ச ஒழிப்பு துறை போலீசார் புனே கோர்ட்டில் முறையிட்டுள்ளனர். போலீசாரின் மனுவில், "நில மோசடி வழக்கில் புகார்தாரர், புதிய குற்றச்சாட்டுகளை கூறியுள்ளார். எனவே அதுகுறித்து விசாரிக்க அனுமதிக்க வேண்டும்." என கூறப்பட்டுள்ளது.


Next Story