வெறுப்புணர்வுக்கு எதிராக போராடவேண்டியது காலத்தின் கட்டாயம்- காந்தி கொள்ளு பேரன் கருத்து

மும்பை,
மகாத்மா காந்தியின் கொள்ளு பேரன் துஷாா் காந்தி நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டார். அப்போது அவர் பேசியதாவது:-
மிகவும் ஆபத்தான வன்முறை, எண்ணங்களில் உள்ள வன்முறை தான். சமீபகாலமாக மக்கள் மனதில் ஒன்றை வைத்து கொண்டு, வெளியில் ஒன்றை பேசுவதை காண முடிகிறது.
அகிம்சையின் அர்த்தத்தை நாம் புரிந்து கொண்டு அதை மனதில் பதிக்க வேண்டும். புதிய இந்தியா உருவாக்கப்படும் நிலையில், வெறுப்பு அரசியல் நிலவி வருகிறது. இது கவலைக்குரிய விஷயம். மராட்டியத்தில் கூட வெறுப்புணர்வு பரப்பப்படுவதை காண முடிகிறது.
'நப்ரதான் பாரத் ஜோடோ' என்ற புதிய முழக்கத்தால் வெறுப்பை ஒழிக்க வேண்டும். அல்லது வெறுப்பு மக்களை அடிமையாக்கிவிடும். புதிய இந்தியா நகரும் பாதையை பார்த்தால் காந்தி அல்லாமல் நாதுராம் கோட்சே தான் தேசத்தந்தையாக இருப்பார் போல தெரிகிறது. வெறுப்புணர்வுக்கு எதிராக போராட வேண்டியது காலத்தின் கட்டாயம். இவ்வாறு அவர் பேசினார்.






