கர்ப்பம் தரித்ததாக காதலி கூறியதை காதலன் அலட்சியமாக எடுத்து கொண்டது தற்கொலைக்கு தூண்டுதல் ஆகாது- ஐகோர்ட்டு கருத்து


கர்ப்பம் தரித்ததாக காதலி கூறியதை காதலன் அலட்சியமாக எடுத்து கொண்டது தற்கொலைக்கு தூண்டுதல் ஆகாது- ஐகோர்ட்டு கருத்து
x

கர்ப்பம் தரித்ததாக காதலி கூறியதற்கு காதலன் அலட்சியம் காட்டியது தற்கொலைக்கு தூண்டுவது ஆகாது என ஐகோர்ட்டு தெரிவித்துள்ளது.

மும்பை,

கர்ப்பம் தரித்ததாக காதலி கூறியதற்கு காதலன் அலட்சியம் காட்டியது தற்கொலைக்கு தூண்டுவது ஆகாது என ஐகோர்ட்டு தெரிவித்துள்ளது.

தற்கொலை

தானேயை சேர்ந்தவர் குணால் டோக்(வயது19). இவர் 16 வயது சிறுமியை காதலித்து வந்தார். இந்தநிலையில் கடந்த 2021-ம் ஆண்டு மார்ச் மாதம் சிறுமி திடீரென தற்கொலை செய்து கொண்டார்.

இந்தநிலையில் தற்கொலைக்கு குணால் டோக் தான் காரணம் என சிறுமியின் தாய் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் அவர் மீது வழக்குப்பதிவு செய்தனர்.

அவர் மீது பாலியல் பலாத்காரம், தற்கொலைக்கு தூண்டுதல் மற்றும் போக்சோ உள்ளிட்ட சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர்.

மனு தாக்கல்

போலீஸ் விசாரணையில், கடந்த 2021-ம் ஆண்டு மார்ச் 3-ந் தேதி சிறுமி தான் கர்ப்பமாக இருக்க வாய்ப்புள்ளதாக காதலனிடம் வாட்ஸ்-அப்பில் தெரிவித்தார். இந்த தகவலை கேட்டும் அவரது காதலர் அலட்சியமாக நடந்துகொண்டதால் சிறுமி மனமுடைந்து வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டதாக தெரியவந்தது. இருப்பினும் பிரேத பரிசோதனை அறிக்கையில் சிறுமி கர்ப்பம் அடையவில்லை என்பது தெரியவந்தது.

இந்தநிலையில் வழக்கில் ஜாமீன் கேட்டு வாலிபர் ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தார். வழக்கு நீதிபதி பாரதி டாங்கேவின் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது.

அப்போது நீதிபதி அளித்த தீர்ப்பில் கூறியதாவது:-

சிறைவாசம் தேவையற்றது..

மனுதாரரான குணால் டோக் சம்பவம் நடந்தபோது 19 வயதுடையவராக இருந்து உள்ளார். அவர் அலட்சியமாக நடந்துகொண்டது அவரது வாட்ஸ்-அப் உரையாடல் மூலம் தெரியவந்தது. இதற்கு அவரது வயது ஒரு காரணமாக இருக்கலாம். இருப்பினும் இருவரும் நெருங்கிய உறவை கொண்டு இருந்ததையும் பார்க்க முடிந்தது.

கர்ப்பம் பற்றிய தகவலுக்கு மனுதாரரின் எதிர்வினை சற்று குறைவாக இருந்திருக்கலாம். இருப்பினும் அவரின் இளம் வயதை கருத்தில் கொண்டு அவரை சிறையில் அடைப்பது என்பது தேவையற்றது. காதலி கர்ப்பம் தரித்தததாக கூறியதை காதலன் அலட்சியமாக எடுத்து கொண்டது தற்கொலைக்கு தூண்டுவது ஆகாது.

இவ்வாறு அவர் கூறினார்.

இதையடுத்து ரூ.25 ஆயிரம் சொந்த ஜாமீனில் குணால் டோக்கை விடுவித்து நீதிபதி உத்தரவிட்டார்.

------------------


Next Story