ஐ.பி.எல். ஏலம் போல உள்ளது; இன்றைய அரசியலின் தரம் தாழ்ந்துவிட்டது - அசோக் சவான் கூறுகிறார்


ஐ.பி.எல். ஏலம் போல உள்ளது; இன்றைய அரசியலின் தரம் தாழ்ந்துவிட்டது - அசோக் சவான் கூறுகிறார்
x
தினத்தந்தி 16 July 2023 7:30 PM GMT (Updated: 16 July 2023 7:30 PM GMT)

ஐ.பி.எல். ஏலம் போல உள்ள இன்றைய அரசியல் தரம் தாழ்ந்துவிட்டது என்று அசோக் சவான் கூறியுள்ளார்.

அவுரங்காபாத்,

ஐ.பி.எல். ஏலம் போல உள்ள இன்றைய அரசியல் தரம் தாழ்ந்துவிட்டது என்று அசோக் சவான் கூறியுள்ளார்.

அதிருப்தி அணி

சிவசேனா தலைமையிலான மகா விகாஸ் அகாடி அரசு கட்சியின் முத்த தலைவர் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான அதிருப்தி அணியின் எதிர்ப்பு காரணமாக கவிழ்ந்தது. ஷிண்டே தலைமையிலான எதிர்ப்பு அணி பா.ஜனதாவுடன் இணைந்து ஆட்சியை பிடித்தது. இதனால் சிவசேனா பிளவு பட்டது. இந்தநிலையில் தற்போது ஆளும் கூட்டணியில் தேசியவாத காங்கிரஸ் தலைவர் அஜித்பவார் தலைமையிலான அணி இணைந்துள்ளது. அஜித்பவார் துணை முதல்-மந்திரி ஆகி உள்ளார். மீண்டும் அவருக்கு நிதி மந்திரி இலாகா ஒதுக்கப்பட்டு உள்ளது. இதனால் தேசியவாத காங்கிரஸ் உடைந்துள்ளது. இதுகுறித்து காங்கிரஸ் கட்சியின் முத்த தலைவரும், முன்னாள் முதல்-மந்திரியுமான அசோக் சவான் கூறியதாவது:-

மீண்டும் நிதிமந்திரி

அஜித்பவார் நிதி மந்திரியாக இருப்பதால் தங்களால் மகா விகாஸ் அகாடி அரசில் இணைந்து செயல்பட முடியவில்லை என முதல்-மந்திரி ஷிண்டே தலைமையிலான அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் சிலர் கட்சிதாவும்போது கூறினர். தற்போது அஜித்பவார் மீண்டும் நிதி மந்திரியாகி உள்ளார். இதுவே அவர்கள் ஆளும் கட்சியில் இருந்து வெளியேற போதுமான காரணமாகும். அவர்கள் இந்த காரணத்தை பயன்படுத்தி மீண்டும் தங்கள் (தாக்கரே தலைமையிலான) அசல் சிவசேனாவுக்கு திரும்ப வேண்டும். ஆனால் அவர்களை திரும்ப ஏற்றுக்கொள்வது தாக்கரே தரப்பின் முடிவாக தான் இருக்கும். தற்போதைய அரசியலின் தரம் தாழ்ந்துவிட்டது. ஐ.பி.எஸ். அணிகளில் வீரர்கள் அணி மாறுவது போன்று கட்சியினர் இங்கிருந்து அங்கு என தாவி வருகின்றனர். தற்போது நம்மை சந்திக்கும் நபர் எந்த கட்சியை சேர்ந்தவர் என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும். மேலும் அந்த கட்சியை அவர் எந்த அணியை சேர்ந்தவர் என்பதையும் பார்க்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.


Next Story