கடனை திருப்பி தராத நண்பனை தலையை துண்டித்து கொலை செய்தவர் கைது - போபால் ரெயில் நிலையத்தில் சிக்கினார்


கடனை திருப்பி தராத நண்பனை தலையை துண்டித்து கொலை செய்தவர் கைது - போபால் ரெயில் நிலையத்தில் சிக்கினார்
x
தினத்தந்தி 17 July 2023 7:00 PM GMT (Updated: 17 July 2023 7:01 PM GMT)

கொடுத்த கடனை திருப்பி தராததால் நண்பரின் தலையை துண்டித்து கொலை செய்தவரை போலீசார் போபால் ரெயில் நிலையத்தில் மடக்கி பிடித்து கைது செய்தனர்.

மும்பை,

கொடுத்த கடனை திருப்பி தராததால் நண்பரின் தலையை துண்டித்து கொலை செய்தவரை போலீசார் போபால் ரெயில் நிலையத்தில் மடக்கி பிடித்து கைது செய்தனர்.

போலீசில் புகார்

ராய்காட் மாவட்டம் பன்வெல் வாட்கர் பகுதியை சேர்ந்தவர் முகமது அஸ்லாம். இவர் கடந்த மாதம் பக்ரீத் பண்டிகை அன்று காணாமல் போனார். எங்கும் தேடியும் அவரை கண்டுபிடிக்க முடியாததால் குடும்பத்தினர் போலீசில் புகார் அளித்தனர். இந்த புகாரின் படி போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரை தேடி வந்தனர். இது தொடர்பான விசாரணையில் காணாமல் போன தினத்தில் முகமது அஸ்லாம் கடைசியாக தனது நண்பரான சாபிக் அலி என்பவருடன் இருந்தது தெரியவந்தது. இதன்பேரில் போலீசார் அவரை பிடித்து விசாரித்தனர். அப்போது முகமது அஸ்லாம் தன்னை சம்பவத்தன்று பட்டறையில் சந்தித்து விட்டு சென்றதாக போலீசாரிடம் தெரிவித்தார்.

தலைமறைவு

இருப்பினும் போலீஸ் விசாரித்ததும் சாபிக் அலி தலைமறைவாகி விட்டார். இதனால் சந்தேகம் அடைந்த போலீசார் அவரை தேடும் பணியில் ஈடுபட்டனர். இதில் சாபிக் அலி சொந்த ஊரான போபாலுக்கு ரெயிலில் ஏறி தப்பி சென்றது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் போபால் ரெயில் நிலையத்தில் வைத்து அவரை மடக்கி பிடித்து கைது செய்தனர். பின்னர் போலீசார் நடத்திய விசாரணையில் அவர் திடுக்கிடும் தகவல்களை வெளியிட்டார்.

தலை துண்டித்து கொலை

அதாவது சாபிக் அலியிடம் முகமது அஸ்லாம் ரூ.57 ஆயிரம் கடன் வாங்கி இருந்தார். பக்ரீத் தினத்தன்று சாபிக் அலி ஊருக்கு செல்ல இருந்ததால் கடனாக வாங்கிய பணத்தை திருப்பி தருமாறு கேட்டு உள்ளார். முகமது அஸ்லாம் பணம் இல்லை என தெரிவித்ததால் கடும் ஆத்திரமடைந்த சாபிக் அலி, அங்கு கிடந்த மீன் வெட்டும் பட்டா கத்தியை எடுத்து முகமது அஸ்லாம் தலையை துண்டாக்கி கொடூரமாக கொலை செய்தார். பின்னர் நண்பரிடம் மோட்டார் சைக்கிளை வாங்கி அதில் அவரது உடலை வைத்து எடுத்துச்சென்று கலம்பொலி சிஞ்ச்பாடாவில் உள்ள கழிமுக கால்வாயில் வீசினார். பின்னர் கரஞ்சேட்டில் உள்ள கால்வாயில் தலையை வீசியதும் தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அவர் வீசிய உடல் மற்றும் தலையை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து கொலை வழக்கு பதிவு செய்து சாபிக் அலியை கைது செய்தனர். மேலும் அவரிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story