கத்தி முனையில் மிரட்டி டிராவல்ஸ் ஏஜெண்டிடம் பணம் பறிக்க முயன்றவர் கைது - கூட்டாளிக்கு வலைவீச்சு


கத்தி முனையில் மிரட்டி டிராவல்ஸ் ஏஜெண்டிடம் பணம் பறிக்க முயன்றவர் கைது - கூட்டாளிக்கு வலைவீச்சு
x
தினத்தந்தி 27 Aug 2023 7:30 PM GMT (Updated: 27 Aug 2023 7:30 PM GMT)

செம்பூரில் டிராவல்ஸ் ஏஜெண்டிடம் கத்தி முனையில் மிரட்டி பணம் பறிக்க முயன்றவர் கைது கூட்டாளியை போலீசார் தேடிவருகின்றனர்

மும்பை,

மும்பை செம்பூரை சேர்ந்த டிராவல்ஸ் ஏஜெண்டை, அதே பகுதியை சேர்ந்த கிருஷ்ணா சிக்னே(வயது40), அவரது கூட்டாளி நிலேஷ் காம்ளே ஆகியோர் கடந்த 23-ந்தேதி ரூ.1 லட்சம் தருமாறு கத்தி முனையில் மிரட்டி உள்ளனர். பணம் தர மறுத்த டிராவல்ஸ் ஏஜெண்டை அவர்கள் சரமாரியாக தாக்கிவிட்டு தப்பி சென்றனர். இந்த காட்சி அங்கிருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவாகி இருந்தது. இது குறித்து பாதிக்கப்பட்ட டிராவல்ஸ் ஏஜெண்டு திலக்நகர் போலீசில் புகார் அளித்தார். இந்த புகாரின் படி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதில் கிருஷ்ணா சிக்னே மீது ஏற்கனவே மிரட்டி பணம் பறிப்பு வழக்கு உள்பட 20-க்கு மேற்பட்ட வழக்குகள் பதிவாகி இருந்தது தெரியவந்தது. மேலும் அவர் மோக்கா சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டு இருந்தார். 6 ஆண்டு தண்டனை பெற்ற அவர் சமீபத்தில் சிறையில் இருந்து விடுதலையானதும் தெரியவந்தது. இதைத்தொடர்ந்து போலீசார் கிருஷ்ணா சிக்னேயை வலைவீசி தேடிவந்தனர். இந்தநிலையில் நவிமும்பை உரண் பகுதியில் அவர் பதுங்கி இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதன்பேரில் போலீசார் அங்கு சென்று அவரை மடக்கி பிடித்து கைது செய்தனர். மேலும் இவரது கூட்டாளியான நிலேஷ் காம்ளேவை போலீசார் தேடி வருகின்றனர்.


Next Story