2 ஆண்டுகளில் மும்பை குண்டும், குழியும் இல்லாத சாலைகளின் நகராக மாறும்- மாநகராட்சி தகவல்


2 ஆண்டுகளில் மும்பை குண்டும், குழியும் இல்லாத சாலைகளின் நகராக மாறும்- மாநகராட்சி தகவல்
x

2 ஆண்டுகளில் மும்பை குண்டும், குழியும் இல்லாத சாலைகளின் நகராக மாறும் என மாநகராட்சி கூறியுள்ளது.

மும்பை,

2 ஆண்டுகளில் மும்பை குண்டும், குழியும் இல்லாத சாலைகளின் நகராக மாறும் என மாநகராட்சி கூறியுள்ளது.

முதல்-மந்திரி உத்தரவு

முதல்-மந்திரி ஏக்நாத் ஷிண்டே நேற்று மும்பையில் குண்டும், குழியும் இல்லாத சாலைகளை அமைப்பது தொடர்பாக அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். அப்போது முதல்-மந்திரி மும்பையில் மக்கள் குண்டும், குழியுமான சாலைகளில் இருந்து நிவாரணம் பெற நடவடிக்கை எடுக்க மாநகராட்சி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். அப்போது மாநகராட்சி கமிஷனர் இக்பால் சகால் நகரில் சிமெண்ட் சாலை போடும் பணி முழுவீச்சில் நடந்து வருவதாக கூறினார்.

மேலும் 2 ஆண்டுகளில் நகர் முழுவதும் சிமெண்ட் சாலை போடும் பணிகள் முடிந்துவிடும் என உறுதி அளித்தார்.

2 ஆண்டுகளில் மாறும்

இந்த கூட்டத்துக்கு பிறகு மும்பை மாநகராட்சி வெளியிட்ட தகவலில் கூறப்பட்டிருப்பதாவது:-

2 ஆண்டுகளில் மும்பை குண்டும், குழியும் இல்லாத சாலைகளின் நகராக மாறும். தற்போது மும்பையில் ரூ.2 ஆயிரத்து 200 கோடி செலவில் 236 கி.மீ. தூரத்துக்கு சிமெண்ட் சாலை போடும் பணி நடந்து வருகிறது. இதேபோல 2023-24-ம் நிதி ஆண்டில் மேலும் 423 கி.மீ.க்கு சிமெண்ட் சாலை போடப்பட உள்ளது. சாலையில் தண்ணீர் தேங்கி நிற்காத வகையில் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

மும்பையில் மொத்தம் 2 ஆயிரம் கி.மீ. தூரத்துக்கு சாலைகள் உள்ளன. இதில் 1,000 கி.மீ.க்கு ஏற்கனவே சிமெண்ட் சாலைகள் போடப்பட்டு உள்ளன.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Next Story