பரேல் டி.டி. மேம்பாலத்தில் இருசக்கர, கனரக வாகனங்கள் செல்ல தடை- மாநகராட்சி அறிவிப்பு

பரேல் டி.டி. மேம்பாலத்தில் வரும் 1-ந் தேதி முதல் இருசக்கர, கனரக வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்படுவதாக மாநகராட்சி அறிவித்து உள்ளது.
மும்பை,
பரேல் டி.டி. மேம்பாலத்தில் வரும் 1-ந் தேதி முதல் இருசக்கர, கனரக வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்படுவதாக மாநகராட்சி அறிவித்து உள்ளது.
இருசக்கர, கனரக வாகனங்களுக்கு தடை
மும்பையில் பரேல் பகுதியில் அம்பேத்கர் ரோட்டில் பழமையான பரேல் டி.டி. மேம்பாலம் உள்ளது. இந்த பாலத்தில் வருகிற 1-ந் தேதி முதல் இருசக்கர, கனரக வாகனங்கள் செல்ல மாநகராட்சி தடை விதித்து உள்ளது. மேம்பாலத்தில் செல்ல இருசக்கர, கனரக வாகனங்களுக்கு தடை விதிக்க போக்குவரத்து போலீசார் தடையில்லா சான்றிதழ் வழங்கி இருப்பதாகவும் மாநகராட்சி தெரிவித்து உள்ளது.
மேம்பாலத்தில் கனரக வாகனங்கள் செல்வதை தடுக்கும் வகையில், அதன் நுழைவு பகுதியில் 2½ மீட்டர் அளவில் உயர கட்டுப்பாடு தடுப்புகள் அமைக்கப்படும். இதன் காரணமாக பரேல் டி.டி. மேம்பாலத்தில் பெஸ்ட் பஸ் உள்பட பொது போக்குவரத்து கனரக வாகனங்கள் கூட செல்ல முடியாது.
வாகன ஓட்டிகள் அதிருப்தி
மேலும் இதுதொடர்பாக மாநகராட்சி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "மழைக்காலத்தில் பொது மக்களுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் மேம்பாலத்தில் குழிகள் நிரப்பட்டுள்ளன. ஆண்டுதோறும் கனரக வாகனங்கள் மேம்பாலத்தில் குழிகளை ஏற்படுத்துகின்றன. எனவே மேம்பாலத்தில் கனரக வாகனங்கள் செல்ல தடை விதிக்குமாறு போக்குவரத்து போலீசார், மாநகராட்சிக்கு கோரிக்கை விடுத்தனர்" என கூறப்பட்டுள்ளது.
தற்போது லோயர் பரேல் ரெயில் நிலையம் அருகில் உள்ள தெலிஸ்லே மேம்பாலமும் மூடப்பட்டுள்ளது. அந்த பாலம் வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் பலர் பரேல் டி.டி. மேம்பாலத்தை பயன்படுத்தி வருகின்றனர். இந்தநிலையில் அங்கு இருசக்கர, கனரக வாகனங்களுக்கு தடை விதிக்கப்பட்டதற்கு வாகன ஓட்டிகள் அதிருப்தி தெரிவித்து உள்ளனர்.
அக்டோபர் மாதத்துக்கு பிறகு சீரமைப்பு பணிகளுக்காக பரேல் டி.டி. மேம்பாலத்தில் அனைத்து வகை வாகனங்களுக்கும் தடை செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.






