எமர்ஜென்சியின் போது சிறை சென்றவர்களுக்கான ஓய்வூதிய திட்டம் மீண்டும் அமலுக்கு வருகிறது- அரசு அறிவிப்பு


எமர்ஜென்சியின் போது சிறை சென்றவர்களுக்கான ஓய்வூதிய திட்டம் மீண்டும் அமலுக்கு வருகிறது- அரசு அறிவிப்பு
x

எமர்ஜென்சியின் போது சிறை சென்றவர்களுக்கான ஓய்வூதிய திட்டம் மீண்டும் அமல்படுத்தப்படுவதாக மாநில அரசு அறிவித்து உள்ளது.

மும்பை,

எமர்ஜென்சியின் போது சிறை சென்றவர்களுக்கான ஓய்வூதிய திட்டம் மீண்டும் அமல்படுத்தப்படுவதாக மாநில அரசு அறிவித்து உள்ளது.

ஓய்வூதிய திட்டம் ரத்து

1975-ம் ஆண்டு கொண்டு வரப்பட்ட அவசர நிலை பிரகடனத்திற்கு (எமர்ஜென்சி) எதிராக போராட்டம் நடத்தி சிறை சென்றவர்களுக்கு மராட்டிய மாநில அரசு சார்பில் ஓய்வு ஊதியம் வழங்கப்பட்டு வந்தது. இந்த திட்டம் கடந்த 2018-ம் ஆண்டு தேவேந்திர பட்னாவிஸ் தலைமையிலான பா.ஜனதா - சிவசேனா கூட்டணி அரசால் அறிமுகம் செய்யப்பட்டது. இந்த திட்டத்தின் மூலம் 1975-ம் ஆண்டு முதல் 1977 வரை அவசர நிலை பிரகடனம் காரணமாக ஜெயிலுக்கு சென்றவர்களுக்கு ரூ.5 ஆயிரம் முதல் ரூ.10 வரை ஓய்வு ஊதியம் வழங்கப்பட்டது. ஒருமாதம் வரை ஜெயிலில் இருந்தவர்களுக்கு ரூ.5 ஆயிரமும், 3 மாதத்திற்கு மேல் ஜெயிலில் இருந்தவர்களுக்கு ரூ.10 ஆயிரமும் வழங்கப்பட்டு வந்தது.

இந்தநிலையில் கொரோனா பரவலை அடுத்து கடந்த 2020-ல் சிவசேனா தலைமையிலான மகாவிகாஸ் அகாடி அரசு அவசர நிலை பிரகடனம் காரணமாக ஜெயிலுக்கு சென்றவர்களுக்கு வழங்கப்பட்டு வந்த ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்தது.

மீண்டும் அறிமுகம்

இந்தநிலையில் ஏக்நாத்ஷிண்டே - பா.ஜனதா அரசு மாநிலத்தில் மீண்டும் அவசரநிலை பிரகடன ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்தி உள்ளது.

இதுகுறித்து துணை முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் கூறுகையில், "ஜன சங்கம், ஆர்.எஸ்.எஸ்.யை சேர்ந்தவர்கள் மட்டுமின்றி அனைத்து கட்சியினரும் அவசரநிலை பிரகடனத்திற்கு எதிராக போராட்டம் நடத்தினார்கள். எனது தந்தை ஜெயிலில் 2 ஆண்டுகள் அடைக்கப்பட்டார். அனைத்து தரப்பினரின் போராட்டத்தால் தான் மீண்டும் ஜனநாயகம் நிலைநிறுத்தப்பட்டது.

கடந்த மகாவிகாஸ் ஆட்சி அவசரநிலை பிரகடனத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கான ஓய்வூதிய திட்டத்தை நிறுத்தியது. காங்கிரஸ் கட்சி கொடுத்த அழுத்தம் காரணமாக நிறுத்தப்பட்டு இருக்கலாம்" என்றார்.



Next Story