தீபிகா படுகோனே படக்குழுவினர் மீது போலீசில் புகார்


தீபிகா படுகோனே படக்குழுவினர் மீது போலீசில் புகார்
x
தினத்தந்தி 19 Dec 2022 6:45 PM GMT (Updated: 20 Dec 2022 4:45 AM GMT)

ஷாருக்கான் படத்தில் நடிகை தீபிகா படுகோனே காவிநிற உடையில் கவர்ச்சி நடனமாடியதற்கு எதிராக படக்குழுவினர் மீது மும்பை போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

மும்பை,

ஷாருக்கான் படத்தில் நடிகை தீபிகா படுகோனே காவிநிற உடையில் கவர்ச்சி நடனமாடியதற்கு எதிராக படக்குழுவினர் மீது மும்பை போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

காவி உடையில் கவர்ச்சி நடனம்

நடிகர் ஷாருக்கான், தீபிகா படுகோனே நடித்த 'பதான்' இந்திப் படத்தின் 'பேஷரம் ரங்' என்ற பாடல் சமீபத்தில் வெளியானது. அந்த பாடலில் தீபிகா படுகோனே காவி நிற ஆடை அணிந்து இருந்தது சர்ச்சையை ஏற்படுத்தியது. பதான் பட பாடலுக்கு இந்து அமைப்புகள் கண்டனம் தெரிவித்தன.

மத்திய பிரதேசம் உள்ளிட்ட ஒரு சில இடங்களில் ஷாருக்கான் கொடும்பாவியும் எரிக்கப்பட்டது. மத்திய பிரதேசத்தில் அந்த மாநில உள்துறை மந்திரி நரோட்டாம் மிஸ்ரா கூட தீபிகா படுகோனேவின் காவி நிற உடை பற்றி விமர்சித்து இருந்தார்.

போலீசில் புகார்

இந்த விவகாரம் தொடர்பாக மும்பை சாக்கிநாக்கா போலீஸ் நிலையத்தில் ஒருவர் புகாா் அளித்து உள்ளார். அந்த புகாரில், இந்துக்களின் உணர்வை புண்படுத்தும் வகையில் வேண்டும் என்றே பாடல் காட்சியில் காவி நிற ஆடையை பயன்படுத்திய படத்தின் தயாரிப்பாளர், இயக்குனர் மற்றும் முக்கிய நடிகர்கள் மீது வழக்குப்பதிவு செய்ய வேண்டும் என கூறப்பட்டுள்ளது.

மேலும் அந்த பாடல் காட்சிகள் இளைஞர்கள் இடையே ஆபாசத்தை தூண்டிவிட்டு சட்டம்- ஒழுங்கு பிரச்சினையை ஏற்படுத்த வாய்ப்பு உள்ளது எனவும் அந்த புகாரில் கூறப்பட்டுள்ளது. இது தொடர்பான புகாரை சாக்கிநாக்கா போலீஸ் அதிகாரி ஒருவர் உறுதிப்படுத்தினார். ஆனால் இதுவரை வழக்கு எதுவும் பதிவு செய்யப்படவில்லை.


Next Story