சிவசேனாவில் நீடித்து இருந்தால் சகன் புஜ்பால் முதல்-மந்திரியாகி இருப்பார்- உத்தவ் தாக்கரே பேச்சு


சிவசேனாவில் நீடித்து இருந்தால் சகன் புஜ்பால் முதல்-மந்திரியாகி இருப்பார்- உத்தவ் தாக்கரே பேச்சு
x
தினத்தந்தி 13 Oct 2022 6:45 PM GMT (Updated: 13 Oct 2022 6:45 PM GMT)

சிவசேனாவில் இருந்து விலகாமல் இருந்தால் சகன் புஜ்பால் மராட்டிய முதல்-மந்திரி ஆகியிருப்பார் என உத்தவ் தாக்கரே பேசியுள்ளார்.

மும்பை,

சிவசேனாவில் இருந்து விலகாமல் இருந்தால் சகன் புஜ்பால் மராட்டிய முதல்-மந்திரி ஆகியிருப்பார் என உத்தவ் தாக்கரே பேசியுள்ளார்.

முதல்-மந்திரி ஆகியிருப்பார்

தேசியவாத காங்கிரஸ் மூத்த தலைவர் சகன் புஜ்பால் 75-வது பிறந்தநாள் விழா மும்பை கிங்சர்க்கிள் பகுதியில் உள்ள அரங்கில் நடந்தது. விழாவில் தேசிய மாநாட்டு கட்சி தலைவர் பரூக் அப்துல்லா, தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார், காங்கிரஸ் மூத்த தலைவர் பாலாசாகிப் தோரட் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

இந்த விழாவில் கலந்து கொண்ட சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே பேசியதாவது:-

தற்போது நான் எந்த அதிர்ச்சியையும் தாங்கி கொள்பவனாகி விட்டேன். ஆனால் நான் இதை ஒத்து கொள்ள வேண்டும். சகன் புஜ்பால் சிவசேனாவில் இருந்து விலகிய போது எங்கள் குடும்பத்துக்கு மிகப்பெரிய அதிர்ச்சியாக அமைந்தது. அது அரசியல் ரீதியான கோபம். குடும்பத்தை சேர்ந்த ஒருவர் எங்களை விட்டு சென்றதால், அவர் விலகி சென்றதை நீண்டகாலம் எங்களால் ஜீரணிக்க முடியவில்லை. அவர் சிவசேனாவை விட்டு விலகி செல்லாமல் இருந்து இருந்தால் முதல்-மந்திரி ஆகி இருப்பார்.

இவ்வாறு அவர் கூறினார்.

சிவசேனாவில் இருந்து விலகல்

சிவசேனாவின் முக்கிய தலைவர்களில் ஒருவராக இருந்த சகன்புஜ்பால் 1990-ம் ஆண்டு காங்கிரசில் சேர்ந்தார். பின்னர் அவர் சரத்பவார் காங்கிரசில் இருந்து விலகி தேசியவாத காங்கிரஸ் அமைத்த போது அந்த கட்சிக்கு சென்றார்.

1995-ம் ஆண்டு மாநிலத்தில் சிவசேனா ஆட்சி அமைந்த போது அந்த கட்சியை சேர்ந்த நாராயண் ரானே, மனோகர் ஜோஷி ஆகியோர் முதல்-மந்திரியானது குறிப்பிடத்தக்கது.



Next Story