புதிய நாடாளுமன்ற கட்டிடம் தொடர்பாக எம்.பி.க்களின் நம்பிக்கையை பெறவில்லை- சரத்பவார் குற்றச்சாட்டு

புதிய நாடாளுமன்ற கட்டிடம் தொடர்பாக எம்.பி.களின் நம்பிக்கையை பெறவில்லை என்று சரத்பவார் கூறினார்.
மும்பை,
புதிய நாடாளுமன்ற கட்டிடம் தொடர்பாக எம்.பி.களின் நம்பிக்கையை பெறவில்லை என்று சரத்பவார் கூறினார்.
புறக்கணிப்பு
டெல்லியில் நாடாளுமன்ற புதிய கட்டிடம் இன்று (ஞாயிற்றுக்கிழமை) திறக்கப்படுகிறது. பிரதமர் மோடி புதிய நாடாளுமன்ற கட்டிடத்தை திறந்து வைக்கிறார். புதிய நாடாளுமன்ற கட்டிடத்தை ஜனாதிபதி திறந்து வைக்க வேண்டும் என எதிர்க்கட்சிகள் விழாவை புறக்கணித்து உள்ளன. இந்தநிலையில் நாடாளுமன்ற கட்டிட திறப்பு விழாவை புறக்கணிக்கும் எதிர்க்கட்சிகளின் முடிவுக்கு சரத்பவார் ஆதரவு தெரிவித்து உள்ளார்.
இதுதொடர்பாக அவர் கூறியதாவது:-
நம்பிக்கையை பெறவில்லை
நான் பல ஆண்டுகளாக எம்.பி.யாக உள்ளேன். தற்போது உள்ள நாடாளுமன்ற கட்டிடம் நல்ல நிலையில் உள்ளது. புதிய நாடாளுமன்றம் கட்டப்படுவது தொடர்பாக செய்தித்தாளை பார்த்து தான் தெரிந்து கொண்டேன். தற்போது அந்த கட்டிட வேலை முடிந்துவிட்டது. நாடாளுமன்ற புதிய கட்டிடம் திறப்பது தொடர்பாக எங்களிடம் எதுவும் கூறப்படவில்லை.
சட்டப்படி ஒவ்வொரு ஆண்டும் முதல் கூட்டத்தொடரில் ஜனாதிபதி உரையாற்ற வேண்டும். எனவே ஜனாதிபதி தான் புதிய கட்டிடத்தை திறக்க வேண்டும். புதிய நாடாளுமன்ற கட்டிடம் திறப்பு தொடர்பாக யாரிடமும் பேசவில்லை என்பதால் மூத்த எதிர்க்கட்சி தலைவர்கள் அந்த விழாவில் இருந்து ஒதுங்கி இருக்க நினைத்தனர். அந்த முடிவை நான் ஏற்றுக்கொள்கிறேன்.
இவ்வாறு அவர் கூறினார்.






