மும்பையில் சாக்கடைகள் தூர்வாரும் பணி முதல் வாரத்தில் தொடங்கும்- ஷிண்டே தகவல்

பருவமழையையொட்டி மும்பையில் சாக்கடைகள் தூர்வாரும் பணி இந்த மாதம் முதல் வாரத்தில் தொடங்கும் என முதல்-மந்திரி ஷிண்டே சட்டசபையில் தெரிவித்தார்.
மும்பை,
பருவமழையையொட்டி மும்பையில் சாக்கடைகள் தூர்வாரும் பணி இந்த மாதம் முதல் வாரத்தில் தொடங்கும் என முதல்-மந்திரி ஷிண்டே சட்டசபையில் தெரிவித்தார்.
கேள்வி எழுப்பிய தமிழ்செல்வன்
மராட்டிய சட்டசபையில் பா.ஜனதா எம்.எல்.ஏக்களான அஷிஷ் சேலார், கேப்டன் தமிழ்செல்வன், பராக் அல்வினி ஆகியோர் நேற்று கேள்வி எழுப்பினர். மும்பையில் பருவமழைக்கு முன் மேற்கொள்ளப்படவுள்ள சாக்கடை கால்வாய்களில் தூர்வாரும் பணிகளுக்கு டெண்டர் விடுவதில் தாமதம் ஏற்படுவது குறித்து கேட்டனர்.
இதற்கு முதல்-மந்திரி ஏக்நாத் ஷிண்டே பதிலளித்து கூறியதாவது:-
முதல் வாரத்தில் தொடங்கும்
வருடந்தோறும் பருவமழைக்கு முன்பு மும்பையில் வெள்ளநீர் தேங்காமல் இருக்க தூர்வாரும் பணிகள் நடைபெறும். அந்த வகையில் நடப்பு ஆண்டில் தூர்வாரும் பணிகள் விரைவில் தொடங்கும். மும்பை நகரின் கிழக்கு மற்றும் மேற்கு புறநகர், விரைவு சாலைகளில் உள்ள பகுதிகளில் உள்ள வடிகால்கள், பாதாள சாக்கடைகள், நகர சாலைகளில் உள்ள மழைநீர் வடிகால்கள் மற்றும் மித்தி நதியில் தூர்வாரும் பணிகளை மேற்கொள்ள மாநகராட்சி 31 டெண்டர்கள் விடுத்து உள்ளது. இந்த டெண்டர் பணிகள் தற்போது இறுதி கட்டத்தில் உள்ளது. தூர்வாரும் பணிகள் இந்த மாத முதல் வாரத்தில் தொடங்கும்.
இவ்வாறு அவர் கூறினார்.






