சொத்து பிரச்சினையில் தாயை கொன்று உடலை கூறு போட்ட மகன், பேரன்- புனேயில் பயங்கரம்


சொத்து பிரச்சினையில் தாயை கொன்று உடலை கூறு போட்ட மகன், பேரன்- புனேயில் பயங்கரம்
x
தினத்தந்தி 7 Sep 2022 12:23 PM GMT (Updated: 7 Sep 2022 12:33 PM GMT)

புனேயில் சொத்து பிரச்சினை காரணமாக பெற்ற தாயை கொன்று உடலை கூறு போட்ட மகன் மற்றும் பேரனை போலீசார் கைது செய்தனர்.

புனே,

புனேயில் சொத்து பிரச்சினை காரணமாக பெற்ற தாயை கொன்று உடலை கூறு போட்ட மகன் மற்றும் பேரனை போலீசார் கைது செய்தனர்.

காணாமல் போனதாக புகார்

புனே கேசவ் நகர் பகுதியை சேர்ந்தவர் உஷா கெய்க்வாட் (வயது 62). இவர் மகன் சந்தீப், மகள் சீத்தல் காம்ளே ஆகியோருடன் வசித்து வந்தார். கடந்த 5-ந் தேதி தனது தாய் காணாமல் போனதாக முண்ட்வா போலீசில் சந்தீப் புகார் அளித்தார். இந்த புகாரின் படி போலீசார் விசாரணை நடத்தினர்.

அப்போது மூதாட்டியிடம் மகன் சந்தீப், பேரன் சாகில் ஆகியோர் வாக்குவாதத்தில் ஈடுபட்டு வந்ததாகவும், அவர்கள் மீது சந்தேகம் இருப்பதாகவும் சீத்தல் காம்ளே போலீசில் தெரிவித்தார். இதன்படி போலீசார் 2 பேரையும் பிடித்து தங்கள் பாணியில் விசாரணை நடத்தினர். இதில் திடுக்கிடும் தகவல் வெளியானது.

மூதாட்டி கொலை

சம்பவத்தன்று தாய்-மகன் இடையே சொத்து பிரச்சினை காரணமாக வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால் ஆத்திரமடைந்த மூதாட்டி உஷா கெய்க்வாட் மகனை வீட்டை விட்டு வெளியேறும்படி தெரிவித்தார். இதனால் சந்தீப் கடும் ஆத்திரம் அடைந்தார். தாய் என்றும் பாராமல் கழுத்தை நெரித்து கொலை செய்தார். பின்னர் உடலை மறைக்க தனது மகன் சாகிலின் உதவியுடன் திட்டம் போட்டார்.

கடையில் இருந்து மின்கட்டர் எந்திரத்தை வாங்கி வந்தார். பின்னர் 2 பேரும் சேர்ந்து உஷா கெய்க்வாட்டின் உடலை துண்டு துண்டாக வெட்டி பிளாஸ்டிக் பையில் போட்டு அடைத்தனர்.

மகன், பேரன் கைது

பின்னர் அந்த பையை முத்தா நதிக்கரையோரமாக வீசி உள்ளனர். இதையடுத்து தாய் காணாமல் போனதாக சந்தீப் போலீசில் புகார் அளித்து நாடகமாடியது வெளிச்சத்திற்கு வந்தது. போலீசார் உடலை வீசிய இடத்திற்கு 2 பேரையும் அழைத்து சென்றனர். தெரூர் பகுதியில் உடலுடன் கிடந்த பிளாஸ்டிக் பையை மீட்டனர்.

இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து கொடூரமான முறையில் தாயை கொலை செய்த சந்தீப், பேரன் சாகில் ஆகிய 2 பேரையும் கைது செய்தனர்.

சொத்து தகராறில் பெற்ற தாயை கொன்று உடலை கூறு போட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


Next Story