காதல் தகராறில் கழிமுக பாலத்தில் இருந்து நண்பரை கீழே தள்ளி கொன்றவர் கைது


காதல் தகராறில் கழிமுக பாலத்தில் இருந்து நண்பரை கீழே தள்ளி கொன்றவர் கைது
x

காதல் விவகாரத்தில் நண்பரை கழிமுக மேம்பாலத்தில் இருந்து கீழே தள்ளி கொன்றவரை போலீசார் கைது செய்தனர்.

மாவட்ட செய்திகள்

மும்பை,

காதல் விவகாரத்தில் நண்பரை கழிமுக மேம்பாலத்தில் இருந்து கீழே தள்ளி கொன்றவரை போலீசார் கைது செய்தனர்.

காணாமல் போன வாலிபர்

மும்பையை சேர்ந்தவர் தீபக் (வயது20). கடந்த 12 நாட்களுக்கு முன்பு தீபக்கின் பெற்றோர் மால்வாணி போலீசில் புகார் ஒன்று அளித்தார். இதில் தனது மகன் கடந்த 12-ந்தேதி நண்பரை பார்க்க செல்வதாக கூறி சென்றான். இதன்பின் அவன் வீடு திரும்பவில்லை என தெரிவித்து இருந்தனர்.

இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தியதில், அவர் காந்திவிலி மேற்கு பகுதியில் உள்ள ஓட்டலில் நண்பர்களை சந்திக்க சென்றதாக தெரியவந்தது. போலீசார் அவரது நண்பர்களை தொடர்பு கொண்டு விசாரித்தனர். இதில் இறுதியாக நண்பர் சூரஜ் விஸ்வகர்மா என்பவரை சந்தித்தது தெரியவந்தது. அவரை போலீஸ் நிலையம் அழைத்து விசாரித்தனர். அப்போது தன்னை தீபக் சந்தித்து விட்டு சென்று விட்டதாக தெரிவித்தார்.

உடல் மீட்பு

இதற்கிடையில் வசாய் ரெயில்வே போலீசார் பயந்தர் கழிமுக கால்வாயில் ஆண் சடலத்தை மீட்டு இருந்தனர். அது தங்களது மகன் தீபக் என பெற்றோர் அடையாளம் காட்டினர். இதையடுத்து போலீசார் சூரஜ் விஸ்வகர்மாவிடம் கிடுக்கிப்பிடியாக விசாரித்தனர்.

இந்த விசாரணையில் சூரஜ் விஸ்வகர்மா விரும்பும் ஒரு பெண்ணை தீபக் காதலித்து வந்தது தெரியவந்தது. இதனால் ஆத்திரம் அடைந்த அவர் தீபக்கை கொலை செய்ய திட்டம் போட்டார். சம்பவத்தன்று பயந்தர்-நய்காவ் இடையே மேம்பாலத்தில் அமர்ந்து 2 பேரும் மதுகுடித்தனர்.

போதை மயக்கத்தில் இருந்த தீபக்கை பாலத்தில் இருந்து கீழே தள்ளி கொலை செய்து விட்டு தப்பி சென்றது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் கொலை வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்தனர்.


Next Story