மராட்டிய மக்கள் இனிமேல் ஏமாற்றத்தை சகித்து கொள்ள மாட்டார்கள்; முன்னாள் மந்திரி பங்கஜா முண்டே பேச்சு


மராட்டிய மக்கள் இனிமேல் ஏமாற்றத்தை  சகித்து கொள்ள மாட்டார்கள்; முன்னாள் மந்திரி பங்கஜா முண்டே பேச்சு
x
தினத்தந்தி 24 Oct 2023 7:45 PM GMT (Updated: 24 Oct 2023 7:45 PM GMT)

மராட்டிய மக்கள் இனிமேல் ஏமாற்றத்தை சகித்து கொள்ள மாட்டார்கள் என முன்னாள் மந்திரி பங்கஜா முண்டே பேசினார்.

மும்பை,

மராட்டிய மக்கள் இனிமேல் ஏமாற்றத்தை சகித்து கொள்ள மாட்டார்கள் என முன்னாள் மந்திரி பங்கஜா முண்டே பேசினார்.

தசரா பொதுக்கூட்டம்

மராட்டியத்தில் பா.ஜனதாவில் செல்வாக்கு மிக்க தலைவராக இருந்த மறைந்த கோபிநாத் முண்டேவின் மகள் பங்கஜா முண்டே. 2014-ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்று மந்திரியாக இருந்த இவர், 2019-ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் தோல்வியை தழுவினார். அதன் பிறகு கட்சியில் இருந்து ஓரங்கட்டப்பட்டார். இந்தநிலையில் பங்கஜா முண்டே நடத்திய தசரா பொதுக்கூட்டம் நேற்று அவரது சொந்த மாவட்டமான பீட்டில் உள்ள சாவர்காவ் பகுதியில் நடந்தது. கூட்டத்தில் அவர் பேசியதாவது:- எனது சர்க்கரை ஆலையில் சோதனை நடந்தபோது மக்கள் எனக்காக 2 நாளில் ரூ.11 கோடி வசூல் செய்தார்கள். அந்த பணத்தை நான் வாங்கவில்லை. ஆனால் எனக்காக கொடுத்த மக்களின் ஆசிர்வாதத்தை நான் பெற்றுக்கொண்டேன்.

ஏமாற்றத்தை சகித்து கொள்ளமாட்டார்கள்

இன்று விவசாயிகள் மகிழ்ச்சியாக இருக்கிறார்களா?. அவர்களுக்கு பயிர் காப்பீடு கிடைக்கிறதா?. கூலி உயர்த்தப்படவில்லை எனில் கரும்பு வெட்டும் தொழிலாளர்கள் வேலைக்கு செல்லமாட்டார்கள். அவர்களுக்கு நீதி வழங்கப்படவில்லை எனில், அடுத்த தசரா பொதுக்கூட்டத்தில் எனது முகத்தை காட்டமாட்டேன். மாநிலம் பல தீவிர பிரச்சினைகளை சந்தித்து வருகிறது. மராத்தா இடஒதுக்கீடு பிரச்சினை தீவிரமானது. இதரபிற்படுத்தப்பட்ட சமுதாயத்தினர் மனதிலும் பல கேள்விகள் உள்ளன. சமுகத்துக்கு பல எதிர்பார்ப்புகள் உள்ளன. தற்போது அவர்கள் ஏமாற்றத்தை சகித்து கொள்ளும் நிலையை இழந்துவிட்டனர். நான் தற்போது மற்றவர்களை தோற்கடிக்க அரசியல் களத்தில் உள்ளேன். மாநிலத்தை முன்னோக்கி எடுத்து செல்ல திறன் இல்லாதவர்களை தோற்கடிக்கும் வேலையை தொடங்க உள்ளேன். அவர்கள் குணமில்லாமல், பண பலத்தை மட்டும் நம்பி இருப்பவர்கள். இவ்வாறு அவர் பேசினார்.


Next Story