உத்தவ் தாக்கரே அணிக்கு 'தீப்பந்தம்' சின்னம் ஒதுக்கீடு

அந்தேரி தொகுதி இடைத்தேர்தலையொட்டி உத்தவ் தாக்கரே அணிக்கு தீப்பந்தம் சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது. மேலும் கட்சியின் பெயரையும் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
மும்பை,
மராட்டியத்தில் பலமான கட்சிகளில் ஒன்றான சிவசேனா கடந்த ஜூன் மாதம் 2 ஆக உடைந்தது.
சிவசேனா சின்னம் முடக்கம்
தற்போது அந்த கட்சி உத்தவ் தாக்கரே, ஏக்நாத் ஷிண்டே தலைமையில் 2 பிரிவாக செயல்பட்டு வருகிறது. ஏக்நாத் ஷிண்டே வசம் பெரும்பாலான எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் உள்ளனர். உத்தவ் தாக்கரேவிடம் கட்சி நிர்வாகிகள் இருப்பதாக கூறப்படுகிறது.
இந்தநிலையில் அடுத்த மாதம் 3-ந்தேதி அந்தேரி கிழக்கு தொகுதிக்கு இடைத்தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்தது. இந்த தேர்தலில் உத்தவ் தாக்கரே அணி சார்பில் மறைந்த எம்.எல்.ஏ. ரமேஷ் லட்கேவின் மனைவி போட்டியிடுகிறார்.
இதற்கிடையே இடைத்தேர்தலில் உத்தவ் தாக்கரே அணிக்கு வில், அம்பு சின்னத்தை ஒதுக்கக்கூடாது என ஷிண்டே தரப்பு தேர்தல் ஆணையத்தில் முறையிட்டது.
இதையடுத்து தேர்தல் ஆணையம் சிவசேனாவின் பெயர், வில், அம்பு சின்னத்தை முடக்கியது. மேலும் இரு தரப்பினரும் தங்கள் அணிக்கான 3 புதிய பெயர்களை தேர்வு செய்து அனுப்புமாறு கேட்டுக்கொண்டது.
உதயசூரியன் - உத்தவ் தாக்கரே
இதையடுத்து உத்தவ் தாக்கரே அணியினர் தீப்பந்தம், திரிசூலம், உதயசூரியன் ஆகிய 3-ல் ஒரு சின்னத்தை தங்களுக்கு ஒதுக்க வேண்டும் என தேர்தல் ஆணையத்திடம் கேட்டு இருந்தனர்.
இதேபோல சிவசேனா பாலாசாகேப் பிரபோந்த்கர் தாக்கரே, சிவசேனா பாலாசாகேப் தாக்கரே, சிவசேனா-உத்தவ் பாலாசாகேப் தாக்கரே ஆகிய பெயர்களில் ஒன்றை தங்கள் அணிக்கு ஒதுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்து இருந்தனர்.
பால்தாக்கரே பெயருடன்...
இந்தநிலையில் நேற்று ஷிண்டே தரப்பினரும் 3 சின்னம், பெயர்களை தேர்வு செய்து, அதில் ஒன்றை தங்களுக்கு ஒதுக்க வேண்டும் என தேர்தல் ஆணையத்திடம் கோரிக்கை விடுத்து உள்ளனர். இதில் அவர்களும் திரிசூலம், உதயசூரியன், கதாயுதம் ஆகிய 3-ல் ஒரு சின்னத்தையும், பால்தாக்கரே பெயருடன் சேர்ந்து சிவசேனா வருமாறு 3 பெயர்களையும் சமர்ப்பித்து உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
2 அணிகளும் கொடுத்த விருப்ப பட்டியலில் இருந்து அவர்களுக்கு ஒரு சின்னம், பெயர் தேர்தல் ஆணையத்தால் தேர்வு செய்யப்படும். தற்போது 2 அணிகளும் கொடுத்து உள்ள சின்னங்கள் ஒரே மாதிரி உள்ளதா, மற்ற கட்சிகள் பயன்படுத்தி வருகிறதா அல்லது ஏற்கனவே முடக்கப்பட்டு உள்ளதா என்பதை ஆய்வு செய்த பின் இந்த விவகாரத்தில் தேர்தல் ஆணையம் முடிவு எடுக்கும் என தேர்தல் ஆணைய முன்னாள் அதிகாரி ஒருவா் கூறினார்.
மேலும் தேர்தல் ஆணையத்தின் பட்டியலில் இல்லாத சின்னங்களை கூட ஒதுக்க முடியும் எனவும் அவர் தெரிவித்தார்.
சின்னம், பெயர் ஒதுக்கீடு
இந்தநிலையில் நேற்று இரவு தேர்தல் ஆணையம் உத்தவ் தாக்கரே அணிக்கு 'தீப்பந்தம்' சின்னத்தை ஒதுக்கியது. மேலும் அவர்களின் அணிக்கு 'சிவசேனா- உத்தவ் பாலாசாகேப் தாக்கரே' பெயர் வழங்கப்பட்டது.
இந்த அறிவிப்பு வெளியானவுடன் சிவசேனாவினர் தங்கள் சமூகவலைதள முகப்புபடமாக 'தீப்பந்தம்' சின்னத்தை வைத்தனர். பல இடங்களில் சிவசேனாவினர் திரண்டு தீப்பந்தம் சின்னம் பதாகையுடன் உத்தவ் தாக்கரே அணிக்கு ஆதரவாக கோஷங்களை எழுப்பினர்.






